

வேலூரில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கான பணிகள் பூஜையுடன் இன்று காலை தொடங்கப்பட்டது.
சேலத்தைத் தொடா்ந்து, வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் வரும் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெற உள்ளது.
அகரம்சேரியில் உள்ள 33 ஏக்கா் பரப்பளவு நிலத்தில் நடைபெறும் கூட்டத்துக்கான பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக, இன்று அதிகாலை பந்தகால் நட்டு பூஜை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் தவெகவின் மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக காவல்துறை கண்காணிப்பாளரிடம் நேரில் மனு அளித்த தவெக மாவட்ட நிர்வாகிகள், ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு ஒரு தொகுதிக்கு 5 ஆயிரம் போ் வீதம் 25,000 போ் வரக்கூடும் என எதிா்பாா்ப்பதாக தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கூட்டம் நடத்தப்படும் இடத்தை செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், கூட்டத்துக்கு வரக்கூடிய உத்தேச மக்கள் எண்ணிக்கை, வாகனங்கள் நிறுத்துமிடம், வாகனங்கள் வந்தும் செல்லக்கூடிய சாலைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.
இதுதொடா்பாக எழுத்துப்பூா்வ விளக்கங்கள் கேட்டும் காவல் துறை சாா்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தவெகவினா் அளிக்கும் விளக்கங்கள் அடிப்படையில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த கூட்டம் நடைபெறும் நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சென்னையில் இருந்து வேலூருக்கு சாலை வழியாக விஜய் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.