வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குட்டிக் கதையுடன் தனது உரையைத் தொடங்கினார்.
வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறிய குட்டிக்கதையில் தெரிவித்ததாவது:
ஒரு பெரிய ஊரில் நான்கு வழிச் சந்திப்பு இருக்கிறது. அதன் நடுவில் முரட்டு ஜல்லிக்கட்டு காளை நிற்கிறது. யாரும் பக்கத்தில் போக முடியவில்லை. காளையை அடக்கினால்தான் அந்த இடம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர், எங்களுக்கு இல்லாத அனுபவமா? நாங்கள் பார்க்காத காளையா? என சிலர் சென்று அடக்க நினைத்தார்கள். ஆனால் அனைவரையும் காளை தூக்கி வீசியது. அப்போது கூட்டத்தை விலக்கி ஒரு சின்ன பையன் செல்கிறான். அவனை பார்த்து எங்களால் முடியவில்லை நீ என்ன செய்ய போற, அனுபவமுள்ள நாங்களே அடிபட்டு கிடக்கிறோம் என பேசுகிறார்கள். மற்றொரு பக்கம் பரிதாபப்படுகிறார்கள்.
இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாத சின்ன பையன் காளை அருகே சென்று, இரண்டு பாக்கெட்டில் இருந்து புல்லுக்கட்டை எடுத்து காளைக்கு கொடுக்கிறான். அந்த காளை புல்லுக்கட்டை சாப்பிட ஆரம்பித்துவிட்டது. சின்ன பையன் அருகே காளை குழந்தையைப் போல் நடந்து வந்தது.
அடிபட்ட அனுபவசாலிகள் தலையைத் தொங்கப்போட்டு இருந்தார்கள். அங்குவந்த பெரியவர் முரட்டு காளையை எப்படி அடக்கின என்று கேட்டார். அந்த காளையைப் பார்த்தால் எனக்கு கோபமாக இருந்ததாக தெரியவில்லை. பசியோடு இருந்ததாகதான் தெரிந்தது, அதனால் உணவு கொடுத்தேன், அதுவும் என்னோடு வந்துவிட்டது என்றான்.
இதைகேட்ட பெரியர் சொன்னார், சின்னவங்க, பெரியவங்க, அனுபவம் உள்ளவங்க, இல்லாதவங்க என எதுவும் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு என்ன செய்து பிரச்னையை தீர்க்கிறான் என்பதுதான் முக்கியம் என பெரியர் தட்டிக் கொடுத்தார்.
இந்த கதையில் முரட்டு காளைதான் அரசியல் களம், பெரியவர்தான் மக்கள், சின்ன பையன்தான் நானும் தவெகவும். நல்ல தலைமை இல்லாததால் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாந்த மக்கள் மத்தியில் வெகுஜன கட்சியாக வந்ததுதான் தவெக” எனத் தெரிவித்தார்.
Summary
A short story told by TVK Vijay in Vellore!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







