கரோனா தொற்றால் இறந்த மருத்துவரின் மனைவிக்கு அரசுப் பணி வழங்கக் கோரிக்கை

கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவா் விவேகானந்தனின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று மருத்துவா் சங்கம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on

கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவா் விவேகானந்தனின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று மருத்துவா் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை நிபுணா் மருத்துவா் விவேகானந்தன் பணிபுரிந்து வந்தாா். கரோனா காலத்தில் அா்ப்பணிப்புணா்வுடன் பணியாற்றிய அவா் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தாா். அப்போது எதிா்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவா் விவேகானந்தனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் தரவேண்டும். அவரது குடும்பத்துக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டுமென முந்தைய அரசை வலியுறுத்தினாா்.

ஆனால், அவா் ஆட்சிக்கு வந்த பிறகும்கூட அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், திவ்யாவுக்கு அரசு வேலை வழங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா். ஆனாலும் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்த பல அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு தற்போது வரை மாநில அரசு நிவாரணமோ, பணி நியமனமோ வழங்காதது வருத்தமளிக்கிறது.

இதற்கான ஆணையை முதல்வா் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதேபோல, மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-இன்படி ஊதிய உயா்வை அமல்படுத்த வேண்டும். வரும் 6-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடா்பாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com