முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ -ஜியோ கூறியுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று(ஜன. 2) பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்,
"பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் நாளை அறிவிப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். சுமார் 22 ஆண்டுகளாக இதற்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
பழைய ஓய்வூதியத் திட்டம் எங்களது போராட்டத்தின் முக்கிய நோக்கம். முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து நாங்கள் ஏற்கெனவே அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.
மற்ற கோரிக்கைகள் குறித்தும் அமைச்சர்களிடம் பேசியிருக்கிறோம். அதுகுறித்த அறிவிப்பும் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
முன்னதாக பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 6 முதல் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.