செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழகத்தில் அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம்! காங்கிரஸ் நிர்வாகி

தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ் நிர்வாகி பதிவிட்டிருப்பது பற்றி...

News image

ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் - ANI

Updated On :5 ஜனவரி 2026, 5:03 am

தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் திமுகவுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்த நிலையில், காங்கிரஸ் தேசிய நிர்வாகியும் தமிழக எம்பியுமான மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆதரவு தெரிவித்திருந்தார்.

மேலும், பிரவீன் சக்கரவர்த்தியை விமர்சித்த திமுக கூட்டணிக் கட்சிகளான விசிக, மதிமுக, இடதுசாரிகளின் தலைவர்களை கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில், அதிகாரப் பகிர்வு குறித்து தற்போது எக்ஸ் தளத்தில் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

“யாருக்கு வாக்கு? – ஐபிடிஎஸ் தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.

இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.

அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே! வெறும் தொகுதிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான நேரம் மட்டுமல்ல, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான நேரமும் கூட.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணிக்கம் தாகூர், தமிழக எம்பி மட்டுமல்ல, அகில இந்திய காங்கிரஸின் ஆந்திர மாநிலத்தின் பொறுப்பாளராகவும், மக்களவை காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் இருக்கிறார்.

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்களாக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தியும், மாணிக்கம் தாகூரும் வெளியிடும் கருத்துகள் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

The time has come to discuss power-sharing in Tamil Nadu! - Congress leader

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.