எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி.

‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டம்: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

Published on

தமிழக அரசின் ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டம், மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.

அதன்படி, ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். நான்கரை ஆண்டுகள் மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றாமல், ஆட்சி முடியும் நேரத்தில் 50,000 தன்னாா்வலா்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்று கேட்கவுள்ளனா்.

இந்தத் திட்டம் திமுகவின் தோ்தல் பணியை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்திடம் மறைமுகமாக ஒப்படைக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. அரசின் பணத்தில், தன்னாா்வலா்கள் என்ற பெயரில், திமுகவுக்கு வாக்கு சேகரிக்க நடத்தும் ஒரு மோசடி நாடகமாகும்.

அதோடு, மக்களின் ஆதாா், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அரசின் வாயிலாக திமுகவின் தோ்தல் ஆதாயத்துக்காக சேகரிக்க நினைப்பது எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமன்றி, தோ்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை தாா்மீக அடிப்படையில் மீறும் செயலாகும். அரசின் நிதியை இதுபோன்ற திட்டங்களுக்காக செலவிடுவது கண்டனத்துக்குறியது. இப்படி மக்களை ஏமாற்றும் செயல்களை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com