

தமிழக அரசு மற்றும் சர்வம் நிறுவனம் இணைந்து செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைப்பதற்கு ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த திட்டம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் ஐஐடி பல்கலைக்கழகத்தின் இயக்குனர் காமகோடி மற்றும் சர்வம் செயற்கை தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவர் ப்ரத்யூஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில்,
"முதலமைச்சர் தலைமையில் ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு புதிய திட்டங்களை உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக சாதித்து வருகிறது, உலகமே செய்யறிவு(ஏஐ) நோக்கி நகர்ந்து வருகிறது.
ஏஐ மூலமாக பணிகளில் எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படும் என்ற கவலை மக்களிடையே இருக்கும் நிலையில் தற்போது வேலைவாய்ப்புகளை அடுத்த படிக்கு எடுத்துச்செல்லும் வகையில் சர்வம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து 10,00 பேருக்கு உயர் ஊதியம் வழங்கும் பணி வழங்கப்படும். தமிழக மக்களுக்கு மிகவும் உதவி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படும்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் தேவைப்படும். அதிலும் இந்தியாவில் முதல் மாநிலமாக இந்த ஏஐ மையத்தினை தமிழ்நாடு கொண்டு வர உள்ளது. தமிழில் முதல் முறையாக ஏஐ தொழில்நுட்பம் உருவாக உள்ளது
திராவிட மாடல் அரசு தொடர்ந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது.உற்பத்தி மற்றும் சேவையில் முதன்மையாக உள்ளது.
தமிழகத்திற்கு ஒரு செயற்கை தொழில்நுட்ப தரவு மையம், முக்கியமாக நம் மக்களின் தகவல் திருடப்படுவது தவிர்க்கப்படும். மேலும், தமிழகத்திற்கு என தனிப்பட்ட ஒரு தனி மையம் இயக்கப்படும்.இதன் மூலம் பல்வேறு வகையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். அனைவரும் ஏஐ பயன்படுத்தி வருகிறோம். நம் மூலமாக வெளிநாட்டு நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றது.
கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஒரு திட்டத்தினை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வெளியிட்டுள்ளனர்" என்றார்.
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசுகையில், "விவசாயம் , மருத்துவம் மற்றும் பல்வேறு துறையில் ஏஐ தொழில்நுட்பம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் தகவல் மையம் கட்டப்படுவதற்கு ஒரு ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையும் தனியார் நிறுவனமும் தங்களின் தரவுகளை ஒரே பகுதியில் இணைத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் ஒரு மையமாக உள்ளது. அனைத்து மக்களையும் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு திட்டமாக இந்த திட்டம் உள்ளது. அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து தரவுகளும் இதில் சேரும். பல தரவுகளைச் சேர்த்து ஒரு கொள்கையை உருவாக்குகிறோம் இதற்கெல்லாம் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.