

கூட்டணியில் இணைப்பது குறித்து தேவைப்பட்டால் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் பேசுவேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இன்று நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன்,
"ஓபிஎஸ் முதலில் ஆலோசனைக் கூட்டத்தை முடிக்கட்டும். நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம் வருவார்கள். ஓபிஎஸ் நல்லவர்தான். கூட்டணி குறித்து இதுவரையில் நான் அவரிடம் பேசவில்லை, தேவைப்பட்டால் கண்டிப்பாக பேசுவேன்.
2001, 2006, 2011, 2016, 2021 தேர்தல்களில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறேன். திருநெல்வேலி தொகுதி மக்கள் என் உடன்பிறந்த சகோதரர்கள்போல. என்னை அவர்களின் வீட்டில் ஒரு பிள்ளைபோல பார்க்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஒருவர் என்ற உணர்வுடனே பார்க்கிறார்கள். திருநெல்வேலி தொகுதியையும் என்னையும் எப்போதும் பிரித்துப் பார்க்க முடியாது. மேற்குறிப்பிட்ட பட்டியலில் 2026 தேர்தலும் இடம்பெறும்" என்றார்.
அதாவது வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
முன்னதாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ்,
"தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று தினகரன் நட்பின் காரணமாக அழைப்பு விடுத்திருக்கிறார். எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். நாங்களும் இணைய வேண்டும் என்றுதான் சொல்கிறோம். டிடிவி தினகரனும் அந்தக் கோரிக்கையை அங்கு வலியுறுத்தினால், நாங்கள் இணையலாம். கட்சியில் மீண்டும் ஒன்று சேர நான் ரெடி, தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா? கேட்டுச் சொல்லங்கள்" என்று கூறியிருக்கிறார்.
இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில், தற்போது அதிமுகவில் சேர ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.