மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும் என்று அமைச்சர் ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏக்களிடம் ரூ. 35 கோடி வரை பேரம் பேசியதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மீது புகார்கள் எழுந்தன. இந்தப் புகாரில் அசோக்குமார் உள்பட 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இதுவரை 9 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது தொடர்பாக தனிப்படைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் சீர்மிகு சட்டப் பள்ளி மாணவர் விடுதிக்கு மாணவர்களோடு இணைந்து அடிக்கல் நாட்டிய அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற நம்பிக்கையில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமண வீடுகளில் பேசியிருக்கிறார். அவர்கள் ஐந்தாண்டுகள் நடத்திய ஆட்சியின் வெளிப்பாட்டுக்கு மக்கள் கொடுத்தத் தீர்ப்புதான்.
பேரத்தில் ஈடுப்பட்ட சம்பவத்தில் அனைவருமே ஆதரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் குதிரை பேரம் செய்துவிட்டதாக ஆளுநரிடம் சென்று புகாரளித்தோ, அழுதோ ஒன்றும் ஆகிவிடாது.
30 நாள்களில் ஆட்சி கவிழும் என எந்த நம்பிக்கையில் பேசினார் மு.க. ஸ்டாலின்? கடந்த 30 நாள்களில் மு.க. ஸ்டாலின் மிகப் பெரியத் தலைவராகிவிட்டாரா? கடந்த ஐந்தாண்டுகளிலே ஸ்டாலின் எதையும் சாதிக்கவில்லை. நீங்கள் ஒவ்வொரு இடத்திலும் ரூ. 30 கோடி- ரூ. 40 கோடி கொடுக்கத் தயாராகிவிட்டனர். ரூ. 1,000 முதல் ரூ. 2,000 கொடுத்து வாக்குகளை வாங்குவோம், ரூ. 35 கோடி, ரூ. 40 கோடி கொடுத்து எம்.எல்.ஏக்களை வாங்குவோம் என்று அவர்கள் நினைத்துவிட்டனர்.
எந்த தைரியத்தில் மு.க. ஸ்டாலின், 30 நாள்களில் ஆட்சிக் கவிழும் என்று கூறினார். வெறும் பணத்தை வைத்துக் கொண்டு செந்தில் பாலாஜி போன்றவர்களை வைத்துக் கொண்டு இந்த மாதிரியான பேரத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த அரசு பயப்படாது.
கடந்த 50 ஆண்டுகளாக எம்.ஜி.ஆரை திமுக எப்படி விமர்சித்ததோ, அதேபோன்று முதல்வர் விஜய்யை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். முதல்வர் விஜய்யைப் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் கிடையாது.
முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் இருவரும் அவரவர் கட்சிக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், இவருமே கட்சியிலிருந்து விலகினாலே, அதிமுகவையும் திமுகவையும் ஓரளவு காப்பாற்ற முடியும்.
பேரம் நடந்ததற்கான ஆதரங்கள் எங்களிடம் இருக்கின்றன. பேரம் பேசியது குறித்து எம்.எல்.ஏ.க்கள் புகாரளித்து வருகின்றனர். மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் தூண்டுதலின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர்கள் யார் யாரெல்லாம் சிக்கியுள்ளார்களோ அவர்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்வார்கள்” என்றார்.
Summary
Minister R. Nirmalkumar has stated that the DMK can be saved only if M.K. Stalin leaves the party
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு | Minister Nirmalkumar |







