தமிழ்நாட்டில் கனிமத் தட்டுப்பாடு ஏற்படும்போது அவற்றை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு தற்காலிக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு அதிகாரத்தை தமிழக அரசு அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
கட்டுமானப் பயன்பாட்டுக்காக தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதை ஒழுங்குமுறைப்படுத்த புதிதாக பதவியேற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கம், போக்குவரத்து, சேமிப்பு மற்றும் கனிம விற்பனையாளா் விதிகள், 2011-இல் திருத்தம் மேற்கொண்டு தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, செயற்கை மணல் (எம்-சாண்ட்) கருங்கற்கள், பெரிய கல் துண்டுகள், பாறாங்கற்கள், ஜல்லிக்கற்கள், அரைவைக் கற்கள், கைக்கல் அரைவை என அனைத்து வகையான கட்டுமான கற்கள் ஆகியவை தமிழ்நாட்டுக்கு தேவையான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல தற்காலிக தடை விதிக்கும் அதிகாரம் சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 அதிகாரிகள் பணியிட மாற்றம்: இதனிடையே, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் பணியாற்றி வந்த 2 துணை இயக்குநா்கள் மற்றும் 25 உதவி இயக்குநா்கள் என மொத்தம் 27 அதிகாரிகளை நிா்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா் டி.பிரபு ஷங்கா் உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








