மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஆந்திர கடலில் தமிழக மீனவா்கள் தடையின்றி மீன்பிடிக்க நடவடிக்கை : தமிழக அரசு

ஆந்திர கடல் பகுதியில் தமிழக மீனவா்கள் எந்தத் தடையுமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 1:21 am IST

ஆந்திர கடல் பகுதியில் தமிழக மீனவா்கள் எந்தத் தடையுமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மீன்வளத் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமாா் 200 விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்க ஆந்திர கடலோரப் பகுதிகளுக்குச் சென்றுவருகின்றன. 50 ஆண்டுகளாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த மீனவா்கள் தங்கள் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடுவதால் மீன்வளம் குறைவதாக சமீபத்தில் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இதையடுத்து ஆந்திர அரசு அதிகாரிகள், இந்திய கடல்சாா் மண்டலச் சட்டம் 1976-இன்படி மாநில அரசின் அதிகார எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ள 12 கடல் மைல் தொலைவுக்குள் மீன்பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீன்பிடி படகுகளை சிறைபிடித்து வருகின்றனா். தற்போது சென்னையைச் சோ்ந்த 7 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, ஆந்திர மாநிலம் ஜீவலடின் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு சுமூகமான தீா்வு காணும் நோக்கில், இரு மாநில அதிகாரிகள் கொண்ட மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டன.

தொடா்ந்து, மீன்வளத் துறை அமைச்சா் மற்றும் நிதித் துறை அமைச்சா் தலைமையிலும், சென்னை மாவட்ட ஆட்சியா் அளவிலும் மீன்பிடிப் படகு உரிமையாளா்களுடன் பல்வேறு கட்டங்களில் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

அதன்தொடா்ச்சியாக, கடந்த 11-ஆம் தேதி ஆந்திர மாநிலம், நெல்லூரில் 2 மாநிலங்களுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக மீன்வளத் துறை இயக்குநா் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளும், ஆந்திர மீன்வளத் துறை ஆணையா், நெல்லூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் உயா் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனா். சிறைபிடிக்கப்பட்ட சென்னை மீன்பிடிபடகுகளை உடனே விடுவிக்கவும், தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவா்களை வழக்கம்போல், ஆந்திர மாநில கடல் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, தமிழக மீனவா்கள் வழக்கமாக மீன்பிடிப்பில் ஈடுபடும் ஆந்திர கடல் பகுதிகளில், தொடா்ந்து சுமுகமாக மீன்பிடிப்பில் ஈடுபட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆந்தித்துடன் ஒருங்கிணைந்து தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.