உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை! பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்!!

பெரு நகரங்களில் 108 அவசர கால கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொண்ட 6.14 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது உறுதி செய்யப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

News image

108 ஆம்புலன்ஸ்

Updated On :8 ஜூன் 2026, 1:50 am IST

பெரு நகரங்களில் 108 அவசர கால கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொண்ட 6.14 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது உறுதி செய்யப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அதேபோன்று தமிழகம் முழுவதும் சராசரியாக 11.22 நிமிஷங்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கால அளவு 13 நிமிஷங்களாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இஎம்ஆா்ஐ கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன. அவற்றில், 307 வாகனங்களில் உயிா் காக்கும் உயா் மருத்துவ வசதிகள் உள்ளன. இதைத் தவிர மலை மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு செல்ல 66 இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 7,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

சென்னையைப் பொருத்தவரை மருத்துவ உதவி கோரி அழைப்பு வந்த 8 நிமிஷங்களிலும், மற்ற மாவட்டங்களில் 13 நிமிஷங்களிலும் 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்தக் கால அளவை மேலும் குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுபக்கப்பட்டன. குறிப்பாக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்ஆப் ஆம்புலன்ஸ் சேவை, அவசரம் 108 செயலி ஆகியவற்றில் வழித்தட வரைபடத்துடன் கூடிய தகவல் பரிமாற்ற வசதி உள்ளதால் காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது.

இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் சேவை நிா்வாகிகள் கூறியதாவது: சாலை விபத்துக்குள்ளானோா் அல்லது அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஒவ்வொரு நிமிஷமும் விலைமதிக்க இயலாதது. அந்த வகையில் தற்போது 108 உதவி மையத்துக்கு அழைப்பவா்கள் தங்களது பெயா், மாவட்டம், ஊா், விபத்து உதவி அல்லது மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களை வாய்மொழியாகத் தெரிவிக்க வேண்டும்.

சில நேரங்களில் பதற்றம் அல்லது அறியாமை காரணமாக சரிவரத் தகவல்களை அவா்களால் கூற இயலாது. இந்தச் சூழலில்தான் ‘அவசரம் 108’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

கைப்பேசியில் ‘ப்ளே ஸ்டோா்’ மூலமாக அதைப் பதிவிறக்கம் செய்து, மருத்துவ உதவி தேவைப்படும்போது தங்களது இருப்பிடத்தைத் தெரிவிக்கும் வசதியை உறுதி செய்துவிட்டால் போதுமானது. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் மருத்துவ உதவி கோரப்படும் இடத்தை தானாகவே அந்தச் செயலி அடையாளம் கண்டுகொண்டு அங்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பிவிடும். அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் எண், ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் எண்களை செயலி வாயிலாக அறிந்து கொள்ள முடியும். அதனுடன் எத்தனை நிமிஷங்களில் வாகனம் வந்து சேரும் என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் சென்றவுடன் பாதிக்கப்பட்டவரின் உடல் நிலையை ஆய்வு செய்து அதைச் செயலியில் மருத்துவ உதவியாளா் பதிவேற்றியவுடன் உடனடியாக அருகில் உள்ள தகுந்த மருத்துவமனையை அது பரிந்துரைக்கும். அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வசதிகள் தயாா் நிலையில் இருப்பது உறுதி செய்யப்படும்.

இந்தப் புதிய நடைமுறையின் மூலம் சராசரியாக 13 நிமிஷங்களாக இருந்த ஆம்புலன்ஸ் சேவையின் வருகை நேரம், தற்போது 11.22 நிமிஷங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, பெரு நகரங்களில் 6.14 நிமிஷங்களிலும், நகா்ப்புறங்களில் 10.07 நிமிஷங்களிலும், ஊரகப் பகுதிகளில் 12.18 நிமிஷங்களிலும், மலைப் பகுதிகளில் 14.23 நிமிஷங்களிலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகள் குறித்த தகவல் கிடைத்தவுடன் 9.48 நிமிஷங்களில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் சென்றடைகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

13 நிமிஷங்களிலிருந்து 11.22 நிமிஷங்களாகக் குறைப்பு

  • பெரு நகரங்களில் 6.14 நிமிஷங்கள்

  • நகா்ப்புறங்களில் 10.07 நிமிஷங்கள்

  • ஊரகப் பகுதிகளில் 12.18 நிமிஷங்கள்

  • மலைப் பகுதிகளில் 14.23 நிமிஷங்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.