கொளத்தூரை இழந்தது போல, மொத்தத்தையும் இழக்கப் போவது உறுதி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்துக்கு தவெக பதிலளித்துள்ளது.
இதுகுறித்து ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு எக்ஸ் தளப் பக்கத்தில், மக்கள் சக்தியின் ஆதரவால், தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஜனநாயகச் சக்திகளின் ஆதரவால் மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக முறையிலான தீர்ப்பை மதித்து, ஜனநாயகச் சக்திகள் எங்களுக்குத் துணை நிற்கின்றன.
ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே. அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு மட்டுமே என்று சிலர் இருக்கிறார்கள். நாங்கள் அப்படியா இருக்கிறோம்? ஆதரவளித்த ஜனநாயகச் சக்திகளுக்கு முழு மனத்துடன் ஆட்சியில் பங்கையும் அதிகாரப் பகிர்வையும் அளித்தோம்.
கூட்டணி என்ற பெயரில் உடனிருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து, அரசியல் ஆதாயங்களை மட்டும் அனுபவிக்கும் சுயநலம் மட்டுமே கொண்ட தீய சக்தி நாங்கள் அல்ல.
கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று பெருந்தன்மை பேசிவிட்டு, அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது எந்த வகைத் தன்மையில் சேரும் ஸ்டாலின் சார்?
ஆட்சிக் கட்டில் பற்றிய கனவிலேயே தூங்கும் உங்களைத் தொட்டிலில் போட்டுப் புட்டிப்பால் கொடுத்து மேலும் தூங்க வைப்பதுபோல, உங்களைச் சுற்றி இருப்போர் ஏமாற்றுவது அறியாமல் இருந்தால், நாங்கள் என்ன செய்ய ஸ்டாலின் சார்?
இப்படியே இருந்தால் கொளத்தூரை இழந்தது போல, கோட்டையை இழந்தது போல, மொத்தத்தையும் நீங்கள் இழக்கப் போவது உறுதி. உங்கள் கூட்டமே உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஸ்டாலின் சார், இது உறுதி. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
TVK has responded to DMK President M. K. Stalin's criticism, stating that just like losing Kolathur, it is certain that they are going to lose everything.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








