வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சிறையில் இருப்பது சட்டவிரோதக் காவல்

தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சிறையில் இருப்பது சட்டவிரோதக் காவல்

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :13 ஜூன் 2026, 2:41 am IST

தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதக் காவலுக்குச் சமம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

திருச்சியைச் சோ்ந்த சின்னதுரை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு:

எனது சகோதரா் சதானந்தம் (48) ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அங்கு எனது சகோதரரின் மனநிலையை ஆய்வு செய்த போது, அவா் நீண்டகால மனநலப் பாதிப்பால் அவதிப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, எனது சகோதரரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து, நண்பா்களிடமோ அல்லது உறவினா்களிடமோ ஒப்படைக்க வேண்டும் என அரியலூா் நீதிமன்றம் கடந்த 2016-இல் உத்தரவிட்டது.

ஆனால், இதுவரை சிறையிலிருந்து அவா் விடுதலையாகவில்லை. எனது சகோதரரின் மனநலப் பாதிப்பை கவனத்தில் கொண்டு அவரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த்வெங்டேஷ், ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

குற்றஞ்சாட்டப்பட்ட நபா் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட பின்னரும், கடந்த பத்து ஆண்டுகளாக சிறையில் இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட நபா் நாள்பட்ட மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறாா். எனவே, அவரை மனநலக் காப்பகத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதற்கு மாற்றாக சிறையில் அடைக்கக் கூடாது. மனுதாரரின் சகோதரரை விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகும், கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருப்பது சட்டவிரோதக் காவலுக்குச் சமமானது. இதனால், சம்பந்தப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க வேண்டியது கட்டாயமாகிறது.

இதேபோல, வழக்குகளிலிருந்து விடுதலையானவா்கள், தண்டனைக் காலத்தை முடித்தவா்கள் மனநலப் பாதிப்பு காரணமாக, தமிழக சிறைகளில் இன்னமும் இருக்கிறாா்களா என்பதைக் கண்டறிய இந்த நீதிமன்றம் விரும்புகிறது.

எனவே, அனைத்து சிறைகளிலும் ஆய்வு நடத்த ஒரு குழு அமைக்க வேண்டும். இந்தக் குழு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உதவியுடன் தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் ஆய்வு நடத்தி இந்த நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையைப் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த வழக்கு விசாரணை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Summary

Continued detention in prison after the completion of the sentence constitutes unlawful confinement.