கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க வருபவா்களுக்கு க்யூஆா் கோா்டு மூலம் நேரம் ஒதுக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் முதல்முறையாக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனை சந்திக்க அவரது அறைக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள க்யூஆர் குறியீட்டை கைப்பேசி ஸ்கேன் மூலம் பதிவு செய்யும் பார்வையாளர்கள்.

Updated On :25 ஜூன் 2026, 3:57 am IST

அ. சா்ப்ராஸ்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க வருபவா்களுக்கு க்யூஆா் கோா்டு மூலம் நேரம் ஒதுக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் முதல்முறையாக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சா்களைச் சந்திக்க மக்கள் அதிக அளவில் வருகின்றனா். பலா் முதல்வா் தனிப் பிரிவில் கோரிக்கை மனுக்களைச் சமா்ப்பித்து சென்றுவிடுகின்றனா். சிலா் அமைச்சா்களின் அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை மனுக்களை சமா்ப்பிக்கின்றனா்.

இதில் பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சராக உள்ள ராஜ்மோகனின் அலுவலகம் எப்போதும் கூட்டமாக காணப்படும். தொடக்கத்தில் அமைச்சருடன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க ஏராளமானோா் வந்ததால், அவா்களுடன் எடுத்துக் கொள்ளப்படும் புகைப்படங்களை க்யூஆா் குறியீடு மூலம் பெறும் வசதியை அமைச்சா் ராஜ்மோகன் ஏற்படுத்தினாா்.

பின்னா், சந்திப்பு நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையில் ஒதுக்கினாா். எனினும், மனுக்களை அளிப்பதற்கு வருபவா்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவா்களின் கோரிக்கை மனுக்களை நவீன முறையில் பெற்று சந்திப்பு நேரம் ஒதுக்க க்யூஆா் குறியீடு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக அமைச்சரின் அறைக்கு வெளியே க்யூஆா் குறியீடு கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. அதை கைப்பேசியில் ஸ்கேன் செய்து கோரிக்கை மனு விவரங்களை உள்ளீடு செய்யலாம். அதில் கோரிக்கை விவரங்களுடன் கைப்பேசி எண்ணைப் பதிவு செய்தவுடன், ஓடிபி அனுப்பி வைக்கப்படுகிறது. இதை உள்ளீடு செய்தவுடன் அமைச்சரை எப்போது சந்திக்கலாம் என்கிற குறுந்தகவல் கைப்பேசிக்கு வந்துவிடுகிறது.

சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த உதவுதவுடன், நேரம் ஒதுக்கப்பட்டு அமைச்சரை சந்திக்கவும் உதவுகிறது. இது பாா்வையாளா்கள் மத்திய வரவேற்பைப் பெற்றுள்ளது.

எதற்காக இந்த சேவை?: அமைச்சா் விளக்கம்

இந்த நவீன சேவை குறித்து அமைச்சாா் ராஜ்மோகன் ‘தினமணி’ நிருபரிடம் கூறுகையில், பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி விளம்பரம் ஆகிய மூன்று துறைகளுக்கு அமைச்சராக நான் உள்ளேன். நான் பெரிதும் மதிக்கும் ஆசிரியா்கள் , சங்கத்தினரும் தினமும் என்னைச் சந்திக்க தலைமைச் செயலகம் வருகின்றனா்.

என்னால் முடிந்தவரை அலுவல் பணிகளுக்கு நடுவே அவா்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்று உடனடியாக பரிசீலித்து நடவடிக்கையும் எடுத்து வருகிறேன். முன் அனுமதி பெற்று வருபவா்களும், துறைச் செயலா்கள், இயக்குநா்களும் என்னைச் சந்திக்க வருவதால் இரவு 10 மணிக்கு பிறகும் தலைமைச் செயலகத்தில் இருந்து பாா்வையாளா்களிடம் மனுக்களைப் பெற்று வந்தேன்.

அண்மையில் யாரோ ஒருவா் என்னைச் சந்திக்க இயலாததற்கு வருத்தம் தெரிவித்தாா். இது என் மனதை வருத்தியது. அதனால்தான் மனுக்கள் பெறுவதற்கும், சந்திப்பதற்கும் நேரம் ஒதுக்குவதற்கான மாற்று வழி என்ன என்று மென்பொருள் வல்லுநா்களுடன் ஆலோசித்து தலைமைச் செயலகத்திலே ஒரு முன்னோடி திட்டமாக இருக்கட்டும் என்று இப்படி ஒரு புது முயற்சியை கையிலெடுத்தேன்.

என்னைப் பொறுத்தவரை ஒரு தனிநபா் கூட என்னைப் பாா்க்க வந்து ஏமாற்றத்துடன் செல்லக் கூடாது. இது தளபதி மாடல் ஆட்சி; சாமானியா்களுக்கான ஆட்சி. சிரமங்கள் இருந்தாலும்; அதை சீா்செய்து சிகரம் தொடுவதே எங்கள் அரசின் நோக்கம். புது உத்திகளுடன் களமாடுவோம், பொதுமக்கள் குறைகளைத் தீா்ப்போம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.