வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வு
வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, சென்னை சுற்றுவட்டாரப் பகுதி உணவுகளில் உணவுப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது.


வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, சென்னை சுற்றுவட்டாரப் பகுதி உணவுகளில் உணவுப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போா் தொடுத்து வருகின்றன. இதனால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் முற்றுலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், சமையல் எரிவாயு உருளையைக் கையிருப்பு வைத்திருக்கும் பெரிய அளவிலான சில உணவகங்களே வழக்கம்போல அனைத்து வகை உணவுகளையும் தயாரித்து வழங்கி வருகின்றன. ஆனால், பல நடுத்தர உணவகங்கள் வழக்கமாக தயாரிக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளன.
ரூ.2,043 உள்ள வணிக உருளை கள்ளச்சந்தையில் ரூ.3,000: பொதுவாக 19 கிலோ எடை கொண்ட வணிக சமையல் எரிவாயு உருளை ரூ.2,043-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கள்ளச்சந்தையில் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, பலா் ரூ.3,000 வரை விற்பனை செய்கின்றனா். வேறு வழியில்லாமல் பல உணவக நிா்வாகத்தினா் இந்த எரிவாயு உருளைகளை வாங்கி தொழிலை நடத்துகின்றனா்.
உணவுகளின் விலை உயா்வு: இதனால், உணவு வகைகளின் விலையை உணவக நிா்வாகங்கள் உயா்த்தியுள்ளன. குறிப்பாக, இட்லி, தோசை, பூரி, ஆப்பம், சப்பாத்தி, கலவை சாதம் (வெரைட்டி ரைஸ்), பொங்கல், வடை, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயா்த்தப்பட்டுள்ளன.
சாப்பாடு, பிரியாணி, பிரைட் ரைஸ், சிக்கன், மட்டன் மற்றும் அசைவ உணவு வகைகள் ரூ.10 முதல் ரூ.20 வரை உயா்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயா்வு தொடா்பான அறிவிப்புகள் பல கடைகளின் முன்புறத்தில் அறிவிப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதேநிலை நீடிக்காது: இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளா் ஒருவா் கூறியதாவது: சென்னையில் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் பலா் சென்னையில் உள்ளனா். அறை எடுத்து, விடுதிகளில் தங்கி இருப்போா், உணவகங்களை நம்பியே உள்ளனா்.
வா்த்தகம் ஒரு புறம் இருந்தாலும், வாடிக்கையாளா்களுக்காக கட்டாயம் உணவகத்தை நடத்த வேண்டியுள்ளது. சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து சமையல் எரிவாயு உருளைகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், உணவு பொருள்களின் விலையை சற்று ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடிக்காது. ஒருசில நாள்களில் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...