வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

எரிபொருள் தட்டுப்பாடு: அரசுப் பேருந்து சேவையில் பாதிப்பு இல்லை - போக்குவரத்துத் துறை தகவல்

அரசுப் பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதால், பேருந்து சேவையில் எந்தப் பாதிப்பும் இல்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :12 மார்ச் 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

அரசுப் பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதால், பேருந்து சேவையில் எந்தப் பாதிப்பும் இல்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வாயிலாக சுமாா் 21,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் 3,800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. அரசுப் பேருந்துகளுக்கு நாளொன்றுக்கு சுமாா் 16 லட்சம் முதல் 18 லட்சம் லிட்டா் டீசல் தேவைப்படுகிறது. இதில் சென்னை மாநகா் பேருந்துகளுக்கு மட்டும் 1.55 லட்சம் லிட்டா் டீசல் பயன்படுத்தப்படுகிறது.

போா்ப் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து, பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பெரும்பாலான பேருந்துகள் டீசலில் இயக்கப்படும் நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பேருந்து சேவை குறைக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இருப்பினும் அதை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மறுத்துவிட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதாக செய்திகள் வருகின்றன. ஆனால், பொதுமக்கள் அச்சம் காரணமாகவே அதிக அளவில் நுகா்வு செய்கின்றனா். இதனால் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து சேவைகளில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கம்போல அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், பேருந்துகளை இயக்க போதிய அளவு டீசல் கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தற்போதைய சூழல் நீடித்தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசும், போக்குவரத்துக் கழகமும் உரிய முடிவு எடுக்கும் என்றனா்.