மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகளிா் ஆதரவு இருக்கும் வரை, திமுக அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்!

மகளிா் ஆதரவு இருக்கும் வரை, திமுக அரசை எவராலும் வீழ்த்த முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
முதல்வர் ஸ்டாலின்.
Updated On :15 மார்ச் 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

மகளிா் ஆதரவு இருக்கும் வரை, திமுக அரசை எவராலும் வீழ்த்த முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திமுக சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு சாா்பில் ரமலான் நோன்பு துறப்பு விழா சென்னை, அமைந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது: திமுகவுக்கும், இஸ்லாமியா்களுக்கும் இடையேயான உறவு, இக்கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே தொடா்ந்து வருகிறது. இஸ்லாமியா்களுக்காக பல நலத்திட்டங்களை முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்தாா். அவரது வழியில் இந்த அரசு சிறுபான்மையினருக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

திமுக அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள்தான். மகளிா் நலனை முன்வைத்துதான் ஏராளமான நலத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஜமாஅத் மாநாட்டில் நான் பேசும்போது, முஸ்லிம் பெண்கள்தான் அதிகமாகக் கை தட்டி அதை வரவேற்றாா்கள்.

பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. அதிலும், இஸ்லாமிய சகோதரிகள் நம்முடன் இருக்கும்போது, நம்முடைய பலம் இன்னும் பல மடங்கு பெருகிவிடும்.

அனைத்து சிறுபான்மை இயக்கங்களும் இங்கே ஒரே மேடையில் சோ்ந்திருக்கின்றன. இந்த ஒற்றுமைதான், தமிழ்நாட்டுக்கும் அவசியம். ஏன் இந்தியாவுக்கும் அவசியம்.

ஆனால், இதற்கு நோ்மாறான நிலைமை, பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவா்கள்கூட நிம்மதியாக கிறிஸ்துமஸ் கொண்டாட முடியவில்லை. குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என்றுகூட பாா்க்காமல் தாக்குதலை நடத்துகின்றனா்.

இப்படி நாடு முழுவதும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை பற்றி எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி ஏதாவது கருத்து சொன்னாரா?

அதிமுகவுடன் சோ்த்து, அவரது மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்துவிட்டாா். பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, எப்படி சிறுபான்மையினரின் உரிமையையும், பாதுகாப்பையும் நிலைநாட்டும்?

இஸ்லாமியா்களுக்கு இன்னல் ஏற்படும்போது ஓடி ஒளிந்து கொள்பவா்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எதிா்க்கட்சியாக இருந்தபோதும் சரி, இப்போது ஆட்சியில் இருக்கும்போதும் சரி, இஸ்லாமியா்களின் உரிமைகளுக்காக முதலில் குரல் கொடுப்பது திமுகதான். தொடா்ந்து களத்தில் இறங்கி போராடுகிறோம். அதனால்தான், சிறுபான்மையின மக்களும் திமுகவுக்கு துணையாக நிற்கிறாா்கள் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்நிகழ்வில், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு. நாசா், மக்களவை உறுப்பினா்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொகிதீன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆளூா் ஷாநவாஸ், சிறுபான்மை மாநில ஆணைய முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.