ஏப். 9 முதல் ஏப். 29 வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது! - தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
வாக்குப் பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது பற்றி...

தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)

தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் வாக்குப் பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதோ வெளியிடுவதோ கூடாது என்று அறிவித்துள்ளது.
கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி மாநிலங்களுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதியும் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23 ஆம் தேதியும் மேற்குவங்கத்திற்கு ஏப்ரல் 23, 29 தேதிகளிலும் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதாவது 5 மாநிலத் தேர்தல் தொடங்கி முடியும் வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
கருத்துக்கணிப்புகள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
மேற்காணும் பொதுத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியீடுதலுக்கும் பரப்புதலுக்கும் பின்வரும் வரையறைகள் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:
அ) 1951ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126Aஆம் பிரிவின் விதித்துறைகளின்படி, (1) யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் இதுசம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.
(2) உட்பிரிவு (1)-றின் காரணங்களுக்காக, தேர்தல் ஆணையம், ஒரு பொது ஆணைப்படி, பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும், அதாவது:-
(a) ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.
(b) ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.
பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம்.
(3) இப்பிரிவின் விதிமுறைகளை மீறும், யாதொரு நபரும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.
ஆ) 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன பிரிவின், (2)ஆம் உட்பிரிவின் விதித்துறைகளின்கீழ் மேற்காணும் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம், 09.04.2026 (வியாழக்கிழமை) காலை 7.00 மணியிலிருந்து 29.04.2026 (புதன்கிழமை) மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இ) 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126(1)(b) ஆம் பிரிவின்கீழ், மேற்காணும் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...