சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியது குறித்து...

News image

வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் - DIN

Updated On :1 மே 2026, 12:36 am

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், இன்று (மே 1) அதிகாலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட அழகர், அதிகாலை பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்.

அப்போது பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மலர்களைத் தூவி 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற முழக்கத்துடன் பக்தர்கள் அழகரை தரிசனம் செய்து வரவேற்றனர்.

கண்டாங்கி பட்டு உடுத்தி, கள்ளர் கொண்டை, குத்தீட்டி, வலைதடியுடன் தங்கப் பல்லக்கில் வந்து வைகையில் இறங்கினார். வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்றார்.

இன்று பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கள்ளழகருக்கு சிறப்பான வரவேற்பு

இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3 வது நாள் நிகழ்வாக நேற்றைய முன் தினம் மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டாகினார்.

பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு கண்டாங்கி பட்டு உடுத்தி கள்ளழகர் வேடமிட்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி வந்த புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

நேற்று (ஏப். 30) அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.

ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து அருள்பாலிப்பு

தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனையடுத்து அதிகாலை 3 மணியளவில் மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவில் முன்பாகவுள்ள ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதைத் தொடர்ந்து வைகை ஆற்றை நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.

வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் திரண்டு வந்ததுள்ளதால் மதுரை மாநகரின் அனைத்து வீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மதுரை மாநகா் முழுமையும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பியியுள்ளது. லட்சக்கணக்கானோரின் வருகையால் மதுரை மாநகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.

ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு, பக்தா்கள் கூட்டத்தை நெறிப்படுத்தினா்.

Summary

Madurai chithirai thiruviza Clad in green silk, Kallazhagar entered the Vaigai River!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.