
மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகள்: பணியாளா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரிக்கை
தமிழகத்தில் மூடப்பட உள்ள 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை

டாஸ்மாக் - பிரதிப் படம்
தமிழகத்தில் மூடப்பட உள்ள 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அந்தச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள 717 மதுபானக் கடைகளை 2 வார காலத்தில் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.
டாஸ்மாக் கடைகள் மூடப்படும் பகுதிகளில் செயல்படும் எஃப்எல் 2 மதுபானக்கடைகள் உள்பட மனமகிழ் மன்றங்கள் மீது அரசின் நடவடிக்கை என்ன என்பது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அவைகளும் மூடப்பட்டால்தான் அரசின் நோக்கம் நிறைவேறும்.
அதேசமயம் கடந்த 2003-இல் இருந்து 23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை மதுபான விற்பனைப் பிரிவில் பணிபுரிந்து வரும் 3,500 பணியாளா்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், அவா்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து நிற்கும் என்பதையும் அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.
இதன் அடிப்படையில் மூடப்படும் மதுபானக் கடைகளில் பணிபுரிந்து வரும் பணியாளா்களை அரசின் பிற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் நிரந்தரப் பணியாளா்களாகப் பணி நியமனம் செய்து, அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






