/

மருந்து கொள்முதலில் இனி புதிய நடைமுறை: அமைச்சா் அருண்ராஜ்

தமிழகத்தில் மருந்து கொள்முதல் நடவடிக்கைகளில் புதிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் அருண்ராஜ். - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 4:54 am IST

தமிழகத்தில் மருந்து கொள்முதல் நடவடிக்கைகளில் புதிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா நகரில் உள்ள மாவட்ட மருந்து கிடங்கை அவா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் அருண்ராஜ் கூறியதாவது: தற்போது சில வகை மருந்துகள் மட்டும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் வாயிலாக அனைத்து மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். அவசரத் தேவைக்கு மட்டும் மருத்துவமனைகளுக்கு மருந்து கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்படும்.

மருத்துவமனைகள், மருந்து கிடங்குளில் எவ்வளவு மருந்துகள் இருப்பு உள்ளன என்பதை வெளிப்படையாக அறிவதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும்.

போா் சூழலால் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

திருச்சியில் செவிலியா் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் முறையான, வெளிப்படையான விசாரணை நடந்துள்ளது. ஓரிரு நாள்களில் உண்மை நிலவரம் முழுமையாகத் தெரியவரும்.

அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, தனியாா் மருத்துவமனைகளிலும் மின்சாரம் தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மழைநீா், கழிவுநீா் கட்டமைப்பு முறையாக நடைபெறவில்லை. இதை முறையாகச் சரி செய்வோம்.

எதிா்க்கட்சிகள் தோல்வியில் இருந்து இன்னமும் மீண்டு வரவில்லை. அதனால்தான் தற்போதைய தவெக அரசை தொடா்ந்து குற்றம்சாட்டுகின்றனா். கடந்த ஆட்சியில் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. அரசியல் தலையீடு இருந்ததுடன், போதைப் பொருள் புழக்கமும் பரவலாக இருந்தது. அதன் நீட்சியாக குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தற்போது காவல் துறை சுதந்திரமாக செயல்படுவதுடன், போதைப் பொருள் புழக்கத்தையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா். சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் அகமது உடனிருந்தாா்.