கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 26) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் , இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு நீர்த்தேக்கத்திற்கான 'பூமி பூஜை' நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை கனிவான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், கர்நாடக மாநில துணை முதல்வர் இது தொடர்பாக பொது வெளியில் தெரிவித்திருப்பது தங்கள் வாழ்வாதாரத்திற்காக காவிரி ஆற்றையே நம்பியிருக்கும் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளிடையே, மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்னை என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும் என்றும், இப்பிரச்னைக்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேல் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னரே தீர்வு காணப்பட்டது என்பது இந்தியப் பிரதமர் அறிந்ததே என்றும், 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், மேக்கேதாட்டு திட்டம், காவிரி நடுவர் மன்றம் அனுமதித்த திட்டங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும், இதனை மேற்கண்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரிப் படுகையானது நீர்ப் பற்றாக்குறை உள்ள படுகை என்பதைக் கருத்தில் கொண்டு, 50 சதவீத நம்பகத்தன்மை அடிப்படையில் கிடைக்கக்கூடிய நீர் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் கூடுதல் நீரைப் பயன்படுத்துவதற்கோ அல்லது புதிய பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்கோ எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதாலும் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தவிர்த்து, காவிரி ஆறு அல்லது அதன் துணை நதிகளின் குறுக்கே வேறு ஏதேனும் புதிய திட்டத்தைத் திட்டமிடுவது, மேற்குறிப்பிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தலையிடுவதற்குச் சமமானதாகும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் திருத்தப்பட்ட இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட வேண்டிய நீர்வரத்துக்கான மூன்று கூறுகளில் ஒன்றான 'கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து' உருவாகும் நீர்வரத்தைத் தடுப்பதற்கு, கர்நாடக மாநிலம் முயன்று வருவதாகத் தமிழ்நாடு உறுதியாகக் கருதுகிறது என்றும்,
கர்நாடகா-தமிழ்நாடு எல்லையின் மிக அருகிலேயே, 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு புதிய மேக்கேதாட்டு திட்டத்தை முன்மொழிவதன் மூலம் கர்நாடக மாநிலம் இம்முயற்சியை மேற்கொள்வதாகத் தமிழ்நாடு கருதுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், 16.02.2018 தேதியிட்ட தனது தீர்ப்பில், நீர்ப்பிடிப்புப் பகுதியின் மேல்பகுதியில் அமைந்துள்ள மாநிலமானது, கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மாநிலத்திற்குத் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத்தைப் பாதிக்கும் வகையிலான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டுத் தீர்ப்பளித்துள்ளது என்பதால், கர்நாடக மாநிலம் ஒரு புதிய நீர்த்தேக்கத்தைக் கட்டுவதற்கு முன்மொழிந்துள்ள இச்செயலானது, மேற்கூறிய உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீதான ஒரு தெளிவான மீறலாகவே அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கர்நாடக மாநிலம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) ஆய்வை மேற்கொள்வதற்கான ஆய்வு வரையறைகள் (Terms of Reference - ToR) பெற முயன்றபோது, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEF & CC) வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவானது, 19.07.2019 அன்று நடைபெற்ற தனது கூட்டத்தில், இதில் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள் உள்ளதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஒரு இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்து, அக்கோரிக்கையைத் திருப்பியனுப்பியது என்பதை கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும், மேலும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEF & CC) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கான ஆய்வு வரையறைகளை (ToR) இதுவரை வழங்கக்கூட இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், எனவே, மேக்கேதாட்டு திட்டப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல கர்நாடக மாநிலம் மேற்கொள்ளும் முயற்சி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டுமல்லாமல், தற்போது நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களையும் அப்பட்டமாக மீறும் செயலாகும் என்றும் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில், 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பை அதன் எழுத்துப்பூர்வ மற்றும் உள்ளார்ந்த உணர்வுகளுக்கு இணங்கச் செயல்படுத்தும் கடமை கொண்ட மத்திய ஜல் சக்தி அமைச்சகமும் (MoJS) மற்றும் மத்திய நீர்வள ஆணையமும் (CWC) தமிழ்நாடு அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்காமலேயே, கர்நாடகாவின் மேக்கேதாட்டு திட்ட முன்மொழிவை ஏற்றுப் பரிசீலித்து வருவது வியப்பளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இச்சூழலில், மேக்கேதாட்டு திட்ட முன்மொழிவின் விரிவான திட்ட அறிக்கையானது (DPR), 05.02.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதி ஆணைக்கும், 16.02.2018 தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முரணாக அமைந்திருப்பதால், அத்திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் (CWC) ஆகியவற்றில் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும், படுகையில் அமைந்துள்ள பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் எந்தவொரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எவ்வகையிலும் மீறக்கூடாது என்றும் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு இந்தியப் பிரதமரை தமிழ்நாடு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Summary
Following the Bhoomi Puja ceremony proposed by the Karnataka government for the Mekedatu dam across the Cauvery River, Chief Minister C. Joseph Vijay today (May 26) wrote a letter to Indian Prime Minister Narendra Modi to uphold Tamil Nadu's rights and safeguard the interests of farmers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக துணை முதல்வருக்கு தலைவா்கள் கண்டனம்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கர்நாடக காங்கிரஸை எதிர்த்து பேச முடியுமா? தவெக அரசுக்கு இபிஎஸ் கேள்வி
பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!




