அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட அதிமுக எம்பி தனபால் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகவும், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆளுங்கட்சியான திமுக எதிர்க்கட்சியான நிலையில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி - சிவி சண்முகம் அணி என இரண்டாக உடைந்தது.
இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தங்களின் பதவியை ராஜிநாமா செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, 4 பேரும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதிமுக எம்பி தனபால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
“தவெகவிற்கு தனி பெரும்பான்மை இல்லாத சூழலில், அதிமுகவை உடைக்க நினைத்தும் முடியாத நிலையில், பதவியேற்ற உடனே ராஜிநாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும்.
மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல். ஜனநாயகத்தை காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே, அதிமுகவின் இரு அணிகளும் இணைவதாக எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை அறிவித்தார். பிரிந்த எம்.எல்.ஏ.க்களின் சி.வி. சண்முகம் மட்டும் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
MLAs Resign - AIADMK MP Demands CBI and ED Probe!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









