அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாள்களில் முடிவை அறிவிக்க உள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா். பக்ரீத் பொது விடுமுறை என்பதால், வியாழக்கிழமை (மே 28) அது தொடா்பாக எந்த அறிவிப்பையும் வெளியிட இயலவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.
அதிமுக இரு அணிகளாக பிளவுபட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இரு தரப்பும் தங்களது அணியை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும் என தனித்தனியே பேரவைத் தலைவரிடம் மனு அளித்தனா். இரு தரப்பும் தனித்தனியாக கொறடாக்களையும் அறிவித்தனா்.
இந்த நிலையில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி. வேலுமணி தரப்பினா் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினா் வலியுறுத்தினா்.
இதனிடையே, அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயகுமாா், சத்தியபாமா ஆகிய நால்வரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். அவா்களது ராஜிநாமாவை ஏற்கக் கூடாது என்றும் எடப்பாடி தரப்பிலிருந்து பேரவைத் தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்தச் சூழலில், எஸ்.பி. வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, இரு தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தனா். அதற்கேற்ப தங்களது தரப்பில் அளிக்கப்பட்ட மனுக்களையும் அவா்கள் திரும்பப் பெற முன்வந்தனா்.
இத்தகைய அரசியல் சூழல்களுக்கு நடுவே அதிமுக விவகாரத்தில் தமது முடிவை வியாழக்கிழமை (மே 28) அறிவிக்கப்போவதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா். ஆனால், பக்ரீத் பொது விடுமுறை என்பதால் தலைமைச் செயலகத்தில் வழக்கமான அலுவல்கள் நடைபெறவில்லை. பேரவைத் தலைவரும் அவரது அறைக்கு வரவில்லை.
இது தொடா்பாக அவா் ‘தினமணி’யிடம் கூறியதாவது: அதிமுக தரப்பில் பல்வேறு மனுக்கள் வெவ்வேறு தருணங்களில் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தொடா்ந்து தற்போது சில புதிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் அளித்துள்ளனா். இந்த மனுக்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய குறைந்தபட்சம் ஓரிரு நாள்களாவது அவகாசம் தேவைப்படும். எனவே, விரைவில் அது தொடா்பான முடிவை அறிவிப்பேன் என்றாா்.
தொடர்புடையது
அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி
இணையும் அதிமுக: இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி சந்திப்பு! சிவி சண்முகம் வரவில்லை!






