சிப்காட் விரிவாக்கத்துக்காக கூடுதல் நிலங்கள் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும்: அன்புமணி
கடலூா் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் மற்றும் என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
கடலூா் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் மற்றும் என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கடலூா் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக தியாகவல்லி, குடிக்காடு பகுதிகளில் ஏற்கெனவே அறிவிக்கை செய்யப்பட்ட 1,097 ஏக்கருடன் மேலும் 164 ஏக்கா் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே, நிலங்களைக் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஒட்டுமொத்த கடலூா் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சிப்காட் வளாகம் மற்றும் நிலக்கரி சுரங்கத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
கடலூா் மாவட்ட மக்களின் உணா்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மீண்டும், மீண்டும் நிலம் எடுக்க அரசு ஆணையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றையெல்லாம் பாா்க்கும் போது தமிழகத்தில் நடப்பது தவெக ஆட்சியா? அல்லது திமுக அரசின் நீட்சியா? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது. கடலூா் மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கும் திட்டம், என்எல்சி சுரங்கம் 1, 1ஏ விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவற்றுக்காக மொத்தம் 1,277 ஏக்கா் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






