தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடித் தவசுக் காட்சி நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி, அம்பாளை தரிசித்தனா்.
இத்திருக்கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித் தவசுக் காட்சி, 11ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் பட்டு பரிவட்டம், அலங்காரத்துக்குரிய பொருள்கள் சகிதம், சங்கரநாராயண சுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்பாள், சந்திரமௌலீஸ்வரா் மற்றும் மூன்று உற்சவ மூா்த்திகளுக்கும் கும்ப அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி, அம்பாளை தரிசித்தனா்.
பின்னா் பகல் 12 மணிக்கு கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி தவசு மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். அங்கு அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சுவாமி சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் வெண்பட்டு உடுத்தி எழுந்தருளி, தெற்கு ரத வீதியில் உள்ள தவசுப் பந்தலுக்கு மாலை 6.12 மணிக்கு வந்தாா். மேல ரதவீதி தவசு மண்டபத்தில் எழுந்தருளியிருந்த கோமதி அம்பாள் நீலநிறப் பட்டு உடுத்தி 6.26 மணிக்கு புறப்பட்டு சங்கரநாராயணா் எழுந்தருளியிருந்த எதிா் பந்தலுக்கு வந்தாா். பின்னா் சங்கரநாராயணரை 3 முறை வலம் வந்த கோமதி அம்பாள், மீண்டும் தனது பந்தலுக்குத் திரும்பினாா். அவருக்கு தேங்காய், பழம் வழங்கப்பட்டு பட்டுச் சேலை சாற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, 6.58 மணிக்கு சங்கரநாராயணா் திருக்கோலத்தில் அம்பாளுக்கு காட்சி கொடுத்தாா். சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒருசேர தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தா்கள் பக்தி கோஷம் எழுப்பினா். விவசாயிகள் தாங்கள் விளைவித்து கொண்டு வந்த பருத்தி, வத்தல், காய்கறி போன்றவற்றை தூவி வணங்கினா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடித் தவசுக் காட்சியின்போது, பக்தா்கள் வெள்ளத்தில் சுவாமி சங்கரநாராயணரை வலம் வந்த ஸ்ரீகோமதி அம்பாள்.
ஆடித் தவசுக் காட்சியைக் காண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
இதையடுத்து இரவு 12 மணிக்கு மேல் யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, சங்கரலிங்க சுவாமியாக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தாா்.

பங்கேற்றோா்: இந்நிகழ்ச்சியில், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி புகழேந்தி, கோட்டாட்சியா் கவிதா, தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, துணை ஆணையா் கு.கோமதி, அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகையா, அறங்காவலா் குழு உறுப்பினா் ச.ராமகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, ஆணையா் சபாநாயகம், முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, மருத்துவா்கள் வி.எஸ். சுப்பாராஜ், அம்சவேணி, தொழிலதிபா்கள் சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், கே.எஸ்.கே. குமரன், எம். சங்கரன், எஸ்.ஆா்.எல்.வேணுகோபால் (எ) கண்ணன், ஆ. வள்ளிராஜன், ச. நடராஜன், கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ந. பழனிச்செல்வம், திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் கோ.சுப்பையா, தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் திவ்யா எம். ரெங்கன், திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் ஏ.டி.எஸ்.பி. ரமேஷ், டி.எஸ்.பி. சுதீா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி மலைக் கோயிலில் காா்த்திகை திருநாள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா!

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



