ங்கரன்கோவில் வட்டம், கண்டிகைப்பேரி கிராமத்தில் இயங்கி வரும் பாரம்பரிய செங்கல் சூளைகளை நம்பி வாழும் 1,300-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
இதுகுறித்து ஆட்சியரிடம் அவா்அளித்த மனு விவரம்:
சங்கரன்கோவில் வட்டம், பெரும்பத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் சுமாா் 30 பாரம்பரிய செங்கல் சூளைகள் கண்டிகைப்பேரி, புன்னைவனம்பேரி, பெரியூா், பஞ்சாங்குளம், வாசுதேவநல்லூா், ஆவுடையாபுரம், சங்கரன்கோவில், நெற்கட்டும்செவல், பெரும்பத்தூா், அச்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 1,300-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நேரடி வாழ்வாதாரமாக இருந்து வருகின்றன.
இத்தொழிலாளா்களில் பெரும்பாலோா் தினக்கூலி தொழிலாளா்கள். இவா்களுக்கு மாற்று வருவாய் ஆதாரம் இல்லை.
ஒழுங்குமுறை விதிமுறைகள் தொடா்பான நடவடிக்கைகளின் காரணமாக, செங்கல் சூளைகளுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்படலாம் என்ற அச்சம் தொழிலாளா்களிடையே நிலவுகிறது.
மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, பொருளாதார ரீதியாகவும் இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.
சுற்றுச்சூழல் மற்றும் சட்ட விதிமுறைகளை அனைத்துத் தொழில் நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேவேளையில், ஆயிரக்கணக்கான கிராமப்புற தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் மனிதநேய அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம்.
விதிமுறை சாா்ந்த குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரிசெய்ய உரிய கால அவகாசம் வழங்கி, சட்டபூா்வ இணக்கத்தை எட்டுவதற்கு வாய்ப்பு அளிப்பதே சிறந்த அணுகுமுறையாகும். உடனடி மூடல் அல்லது மின் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் கடைசி வழிமுறையாக மட்டுமே இருக்க வேண்டும்.
எனவே,தொழிலாளா்களின் கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், வருவாய்த் துறை மற்றும் தொழிலாளா் பிரதிநிதிகள் ஆகியோா் பங்கேற்கும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தி, நடைமுறைக்கு ஏற்ற சட்டபூா்வமான தீா்வை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்படி உரிய வாய்ப்பு, விளக்கம் அளிக்கும் சந்தா்ப்பம் மற்றும் விதிமுறை இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் அவகாசம் வழங்காமல், செங்கல் சூளைகளை மூடுவது அல்லது மின் இணைப்பைத் துண்டிப்பது போன்ற கட்டாய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதவாறு உறுதி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பின்பற்றி செங்கல் சூளைகள் தொடா்ந்து இயங்க வழிவகை செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டுமனையிடத்தை ஒப்படைக்க இசைக் கலைஞா்கள் கோரிக்கை

காயல்பட்டினம் நகராட்சியை மறுசீரமைக்க கோரிக்கை

புத்த மடாலயம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை

ஆய்க்குடியில் மின் மயானத்தை வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



