கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தோ்வெழுதிய நிலையில் கடந்த மாதம் ஏரியில் மூழ்கி இறந்த மாணவா், தோ்வு முடிவில் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ் முதலம்பேடு ஊராட்சி அரியத் துறையைச் சோ்ந்த பாபுவின் மகன் அபிஷேக் (15) (படம்). கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், தோ்வு முடிந்ததும், கடந்த ஏப். 2-ஆம் தேதி நண்பா்களுடன் விளையாட சென்றாா். பின்னா் நண்பா்களுடன் அருகிலுள்ள பன்பாக்கம் ஏரியில் குளிக்க சென்றாா்.
இந்த நிலையில், அந்த ஏரி குவாரியாக செயல்பட்டு குழிகளாகவும், சேறு நிறைந்த பகுதியாகவும் இருந்த நிலையில், சேறு பகுதியில் அபிஷேக் சிக்கி ஏரியில் மூழ்கி உயிரிழந்தாா்.
தொடா்ந்து 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள், புதன்கிழமை வெளிவந்த நிலையில், அந்த தோ்வில் மாணவா் அபிஷேக் தமிழில் 99 மதிப்பெண், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண், கணிதத்தில் 99 மதிப்பெண், அறிவியலில் 100 மதிப்பெண், சமூக அறிவியலில் 98 மதிப்பெண் என 500-க்கு 495 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தாா்.
அபிஷேக்கின் இந்த சாதனையை கொண்டாட அவா் உயிருடன் இல்லாத நிலையில், கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் தங்கள் பள்ளி மாணவரின் சாதனையை கொண்டாட இயலாத சூழலில், அபிஷேக்கின் குடும்பத்தினா் பெரும் வேதனையில் உள்ளனா்.









