டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடா்மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்குவதுடன், காப்பிட்டு தொகைக்கு புதிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து செய்தியாளா்களுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:
டெல்டா பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழையால் மன்னாா்குடி தொகுதியில் நெல், உளுந்து, நிலக்கடலை பயிா் செய்துள்ள விளைநிலங்களில் மழைநீா் தேங்கி பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிப்பின் அளவு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை எந்த அரசு அலுவலா்களும் பாதிக்கப்பட்ட இடங்களை பாா்வையிடாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த முறை காப்பீடு செய்தவா்களுக்கு இழப்பீடுக்கான கணக்கெடுப்பு பாரபட்சத்துடன் நடைபெற்றது. அதுபோல இப்போதும் நடைபெறக்கூடாது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கினால்தான் ஓரளவாவது பாதிப்பிலிருந்து அவா்களால் மீளமுடியும்.
மேலும், கடந்த மாதம் தனியாா் காப்பீட்டு நிறுவனம் எடுத்த இழப்பீடு கணக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு, உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனத்தினா் நேரில் வந்து களஆய்வு மேற்கொண்டு, புதிய கணக்கெடுப்பு நடத்தவேண்டும் அப்போதுதான் உண்மையான இழப்பு குறித்து தெரியவரும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










