கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது சென்செக்ஸ், நிஃப்டி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதை தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான

News image
Updated On :15 ஜூன் 2021, 9:29 pm

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதை தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளன. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்து 52,773-இல் புதிய உச்சத்தில் நிலைபெற்றுள்ளது.
 இந்தியாவில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்திருந்தாலும், உலகளாவிய குறிப்புகள் நேர்மறையாக இருந்ததால், இந்திய சந்தைகள் எழுச்சியுடன் தொடங்கின. பிற்பகல் வரையிலும் வெகுநேரம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே வர்த்தகமாகி வந்தது. மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், ஐடி மேஜர் இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. இதையடுத்து, பிற்பகல் 2 மணிக்கு மேல் "காளை' வேகமெடுத்தது. இதனால், சென்செக்ஸ் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 இதற்கிடையே, சந்தையில் ஆயில் அண்ட் காஸ், ஐடி, ரியால்ட்டி, வங்கிப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தன. ஆனால், பார்மா, மெட்டல், பிஎஸ்யு, மின்துறை பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.75 ஆயிரம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,368 பங்குகளில் 1,943 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,280 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 145 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 530 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 24 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 565 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 185 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.75 ஆயிரம் கோடி உயர்ந்து, வர்த்தக முடிவில் ரூ.231.58 லட்சம் கோடியாக இருந்தது.
 புதிய வரலாற்று உச்சம்: சென்செக்ஸ் காலையில் உற்சாகத்துடன் 200.30 புள்ளிகள் கூடுதலுடன் 52,751.83-இல் தொடங்கி 52,671.29 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 52,869.51 வரை உயர்ந்த புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 221.52 புள்ளிகள் (0.42 சதவீதம்) கூடுதலுடன் 52,773.05-இல் நிலைபெற்றது. இதையடுத்து, சென்செக்ஸ் தொடர்ந்து நான்காவது நாளாக ஏறுமுகம் கண்டுள்ளது.
 ஏஷியன் பெயிண்ட்ஸ் முன்னிலை: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 15 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் ஏஷியன் பெயிண்ட்ஸ் 3.18 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்டஸ்இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே இந்தியா, ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயம் பெற்றன.
 பஜாஜ் ஃபின் சர்வ் சரிவு: அதே சமயம், பஜாஜ் ஃபின்சர்வ் 1.11 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டாக்டர் ரெட்டீஸ் லேப், டைட்டன், சன்பார்மா, பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட், டிசிஎஸ், எஸ்பிஐ, மாருதி சுஸுகி உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.
 நிஃப்டி 57 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,072 பங்குகள் ஆதாயம் பெற்றன. 705 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,866.95-இல் தொடங்கி 15,842.40 வரை கீழே சென்றது.
 பின்னர், அதிகபட்சமாக 15,901.60 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 57.40 புள்ளிகள் (0.36 சதவீதம்) கூடுதலுடன் 15,869.25-இல் நிலைபெற்றது.
 துறைவாரியாகப் பார்த்தால், நிஃப்டி மீடியா குறியீடு 2 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, எஃப்எம்சிஜி ஆகிய குறியீடுகள் 0.75 முதல் 1.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. அதேசமயம், பிஎஸ்யு பேங்க், மெட்டல், பார்மா குறியீடுகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

Story image

 தனியார் வங்கி பங்குகளுக்கு வரவேற்பு
 பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தனியார் வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரைவேட் பேங்க் குறியீட்டு தொகுப்பில் இடம் பெற்றுள்ள 10 முன்னணி பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. ஏற்றம் பெற்ற பங்குகள் விவரம்:

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.