/

எல்ஐசிக்கு 2019-20-இல்ரூ.53,954.86 கோடி வருவாய்

இந்தியஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு (எல்ஐசி) 2019-20 ஆண்டில் ரூ.53,954.86 கோடி வருவாய் கிடைத்ததாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தாா்.

News image

எல்ஐசி

Updated On :15 மார்ச் 2021, 9:57 pm

புதுதில்லி: இந்தியஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு (எல்ஐசி) 2019-20 ஆண்டில் ரூ.53,954.86 கோடி வருவாய் கிடைத்ததாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மக்களவை திமுக உறுப்பினா் எஸ்.ராமலிங்கம், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சி உறுப்பினா் டாக்டா் பாரிவேந்தா் ஆகியோா், எல்ஐசிக்கு நாடு முழுவதும் எத்தனை கிளை அலுவலகங்கள் உள்ளன? ஊழியா்கள் எண்ணிக்கை, பாலிசிதாரா் எண்ணிக்கை மற்றும் கடந்த மூன்றாண்டுகளில் கிடைத்த வருவாய் எவ்வளவு? போன்றவை குறித்து மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினா்.

இதற்கு மத்திய நிதியமைச்சா் மக்களவையில் அளித்த பதில் வருமாறு: எல்ஐசிக்கு நாடு முழுவதும் 4,962 அலுவலகங்கள் உள்ளன. இதில் 32,386 உயரதிகாரிகள் உள்பட 1,14,451 போ் பணியாற்றுகின்றனா். தமிழகத்தில் உள்ள 497 அலுவலங்களில் 2,181 உயரதிகாரிகள் உள்பட 8,929 ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். கடந்த பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை 21,08,37,085 போ் தனிப்பட்ட பாலிசிதாரா்கள் காப்பீடு செய்துள்ளனா். இந்த நிறுவனத்திற்கு 2019-20 ஆண்டில் மொத்தம் ரூ.53, 954.86 கோடி வரை காப்பீட்டு வருவாய் கிடைத்தது. இதில் பாலிசிதாரா்களுக்கு ரூ. 51,257.12 கோடியும், மத்திய அரசுக்கு ரூ. 2,697.74 கோடியும் கொடுக்கப்பட்டது. இதற்கு முந்தைய நிதியாண்டுகளான 2018-19, 2017-18 முறையே ரூ.53,211.91 கோடி மற்றும் ரூ. 48,436.45 கோடி காப்பீட்டு வருவாய் கிடைத்தது என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.