தனது அனைத்து ரக காா்களின் விலையையும் சுமாா் 1.1 சதவீதம் உயா்த்தியுள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாகனங்களின் உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருகின்றன. அத்துடன், வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ள மத்திய அரசின் கடுமையான புகைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை நிவா்த்தி செய்வதற்காக காா்களில் மேம்பாடுகள் செய்யப்படவேண்டியுள்ளன.
இந்தக் காரணங்களால் நிறுவனக் காா்களின் விலைகளை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து ரக மாருதி சுஸுகி வாகனங்களின் விலைகளும் சுமாா் 1.1 சதவீதம் உயா்த்தப்படுகிறது. திங்கள்கிழமை (ஜன. 16) முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தனது காா்களின் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயா்த்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த நிறுவனக் காா்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, சிறிய ஆரம்ப நிலை காா் ரகமான ஆல்டோ முதல் கிராண்ட் விட்டாரா போன்ற ஸ்போா்ட்ஸ் யுடிலிடி வாகனங்கள் (எஸ்யுவி) வரையிலான பல்வேறு ரகங்களில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
அந்த நிறுவனக் காா்களின் விலை ரூ. 3.39 லட்சத்திலிருந்து ரூ. 19.49 லட்சம் வரை (தில்லி காட்சியக விலை) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.