
மும்பை: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளதால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்ந்து முதல் முறையாக 82,000 புள்ளிகளையும், நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 25,000 புள்ளிகளையும் கடந்து் சாதனை படைத்தது.
காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 388.15 புள்ளிகள் உயர்ந்து 82,129.49 புள்ளிகளை எட்டியது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 127.15 புள்ளிகள் உயர்ந்து 25,078.30 புள்ளிகளாக வர்த்தகமானது.
சென்செக்ஸ் பங்குகளில், மாருதி அதன் ஜூன் காலாண்டு முடிவுகளைத் தொடர்ந்து 2.93 சதவிகிதம் அதிகரித்தது.
மாருதி சுசூகி இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லைஃப் இன்சூரன்ஸ், டாடா கன்ஸ்யூமர்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப், ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ், என்டிபிசி, அப்பல்லோ மருத்துவமனைகள், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. மறுபுறம் லார்சன் & டூப்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், சன் பார்மா, ஐடிசி, இன்போசிஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.
மாருதி சுசுகி இந்தியா, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், எச்.டி.எஃப்.சி லைஃப் இன்சூரன்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் என்.டி.பி.சி ஆகிய பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தைப் பெற்று தந்தன.
செப்டம்பரில் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை இந்திய பங்குச் சந்தைகளுக்கு வெகுவாக சாதகமாக அமைந்தது.
ஆசிய சந்தைகளில் டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சரிந்தும், சியோல் பங்குச் சந்தை உயர்ந்தும் முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (புதன்கிழமையன்று) ரூ.3,462.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.98 சதவிகிதம் உயர்ந்து 81.63 டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.