
புதுதில்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆட்டோமொபைல் துறையில் இந்தியா உலகளவில் முதலிடத்திற்கு உயரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.
அமேசான் சம்பாவ் உச்சி மாநாட்டில் இன்று கலந்து கொண்டு பேசிய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர், இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிப்பிட்டார். தான் பதவியேற்றதிலிருந்து ரூ.7 லட்சம் கோடியிலிருந்து ரூ.22 லட்சம் கோடியாக இந்த துறை வளர்ந்துள்ளது என்றார்.
முதலாவதாக அமெரிக்கா (ரூ.78 லட்சம் கோடி), இரண்டாவது சீனா (ரூ.47 லட்சம் கோடி) தற்போது இந்தியா (ரூ.22 லட்சம் கோடி).
உலகளாவிய ஆட்டோமொபைல் பிராண்டுகள் இந்தியாவில் இருப்பது, நாட்டின் திறன் குறித்த தெளிவான அறிகுறியாகும். அதே வேளையில் சரக்கு போக்குவரத்து செலவுகளை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ஒற்றை இலக்குக்குள் குறைக்க சாலை போக்குவரத்து அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதையும் படிக்க: தில்லி-பெங்களூரு வழித்தடத்தில் சேவையைத் துவக்கிய இண்டிகோ!
இந்தியாவில் சரக்கு போக்குவரத்து செலவு 16 சதவிகிதமாகவும், சீனாவில் 8 சதவிகிதமாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 12 சதவிகிதமாகவும் உள்ள வேளையில், சரக்கு போக்குவரத்து செலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தனது அமைச்சகத்தில் கீழ் இரண்டு ஆண்டுகளுக்குள் சரக்கு போக்குவரத்து செலவு 9 சதவிகிதமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை வெகுவாகக் குறைக்க குறிப்பிட்ட திட்டங்களையும் எடுத்துரைத்தார்.
புதுதில்லியிலிருந்து டேராடூன் வரையிலான பயணம் தற்போது சுமார் ஒன்பது மணி நேரம் ஆகும். இது 2025 ஜனவரிக்குள் இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்படும். அதேபோல், புதுதில்லி - மும்பை மற்றும் சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரம் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்று எரிபொருள்கள் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், வாகனங்களில் பயோ எத்தனால் பயன்படுத்துவது எரிபொருள் செலவில் குறிப்பிடத்தக்க சேமிப்புக்கு வழிவகுக்கும் வேளையில், மாசுபாட்டைக் குறைக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.