
மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது.
இதற்குக் காரணம், ஜியோ நிறுவனம் தனது அலைதிறனை மேம்படுத்தியதுதான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, 5ஜி இணைய சேவைக்கு 3.3 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் அலைவரிசையே தேவையானதாக உள்ள நிலையில், ஜியோ நிறுவனம் 26 ஜிகாஹெர்ட்ஸ் திறனுடன் இணைய சேவையை மேம்படுத்தியுள்ளது.
இவை பெரும்பாலும் தனிநபர்களுக்கான பயன்பாட்டில் பொருந்துவதில்லை; பெரு நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய அடர்த்தியான அலைவரிசையுடைய இணைய சேவையைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ, இணைய சேவையில் அடுத்தக்கட்டத்துக்குச் சென்றுள்ளது.
தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்-ஐ (26 GHz Band) அறிமுகம் செய்துள்ளது. இது எம்எம்வேவ் (mmWave) அதாவது, மில்லிமீட்டர் அலைவரிசை எனவும் அழைக்கப்படுகிறது.
முன்னதாக ஜியோ சேவையில் 3.3 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் அலைவரிசை (5ஜி) மட்டுமே அணுகக் கிடைக்கும் அளவீடாக இருந்தது. இது ஜியோவின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டத்திலும் கிடைக்கிறது. அதாவது வழக்கமான 5ஜி சேவை ஆகும்.
ஆனால் எம்எம்வேவ் அலைவரிசை பயன்பாடு, மிகவும் விலை உயர்ந்ததகப் பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் அடர்த்தியான மற்றும் அதிவேக இணைய சேவையைப் பெறமுடியும்.
எந்தெந்த மாநிலங்களில் அதிவேக இணைய சேவை
26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் அலைவரிசையானது நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ஒடிசா, திரிபுரா, நாகாலாந்து மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் இந்த அதிவேக இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களில் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இச்சேவையை அதிவேகத்தில் பெற முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 3 நகரங்களில் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் அலைவரிசை கிடைக்கும் வகையிலான பணிகளை ஜியோ மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை தம்புச்செட்டி தெரு - பாரீஸ், பார்க் டவுன், பள்ளிக்குப்பம் - அம்பத்தூர் ஆகிய 3 இடங்களில் இச்சேவைக்கான கோபுரங்களை ஜியோ நிறுவியுள்ளது.
நாட்டில் செயல்படும் பெரு நிறுவனங்கள் அனைத்தும் இணைய சேவையைப் பயன்படுத்தி வரும் நிலையில், அத்தகைய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த நடவடிக்கையில் ஜியோ இறங்கியுள்ளது.
இதில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் பலன்களைப் பொறுத்து படிப்படியாக மற்ற நகரங்களில் இச்சேவையை மேம்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவில் 17 கோடிக்கும் அதிகமான 5ஜி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5ஜி பயனர் தளம் 2026 இறுதிக்குள் 23 - 25 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | செல்போனை ரீசார்ஜ் செய்தால் இலவசமாக ஐபிஎல் பார்க்கலாம்! எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.