
மும்பை: இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது அமர்வாக உயர்ந்து முடிவடைந்தன. இதில் ஆட்டோ, பொதுத்துறை வங்கி, ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகளில் காணப்பட்ட கொள்முதல் காரணமாக நிஃப்டி 25,300க்கு மேல் சென்று நிறைவடைந்தது.
இந்தியா-அமெரிக்க உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை மற்றும் இன்றிரவு ஃபெட் வட்டி விகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்பு ஆகியவை பேரணிக்கு வெகுவாக உத்வேகம் அளித்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 0.43 சதவிகிதம் உயர்ந்து 82,741.95 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 313.02 புள்ளிகள் உயர்ந்து 82,693.71 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 91.15 புள்ளிகள் உயர்ந்து 25,330.25 ஆக நிலைபெற்றது.
நிஃப்டி மிட்கேப் குறியீடு ஓரளவு உயர்ந்து முடிவடைந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.68% உயர்ந்தது. உலகளாவிய சந்தைகளில் கலவையானவை போக்கு இருந்தபோதிலும், இந்திய அளவுகோல்கள் உயர்ந்து வர்த்தகமானது.
சென்செக்ஸில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, மாருதி, டிரென்ட் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை உயர்ந்தும் பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன், ஐடிசி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் டாடா கன்ஸ்யூமர், எஸ்பிஐ, பிஇஎல், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி சுசுகி ஆகியவை உயர்ந்தும் எச்டிஎஃப்சி லைஃப், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவுடன் நிறவைடந்தன.
துறைகளில் எஃப்எம்சிஜி, நுகர்வோர் சாதனங்கள், தொலைத்தொடர்பு, உலோகம் சரிவுடன் முடிந்த நிலையில் ஆட்டோ, பொதுத்துறை வங்கி, ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு 0.5 முதல் 2.6% வரை உயர்ந்தன.
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் நேர்மறையானவை என்றும், ஒப்பந்தம் விரைவாகவும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையிலும் முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது.
ஆசிய சந்தைகளில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில் தென் கொரியா கோஸ்பி மற்றும் ஜப்பான் நிக்கி 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸை கையகப்படுத்த சிசிஐ ஒப்புதல் அளித்ததால் பிஎன்சி இன்ஃப்ராடெக் பங்குகள் 2% உயர்ந்தன. காலாண்டு லாபம் 31% சரிந்த நிலையில் மங்கள் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 7% சரிந்தன. தெலுங்கானா மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ரத்து உத்தரவின் பேரில் பிரீமியர் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் பங்குகள் 12% அதிகரிப்பு. அதே வேளையில் லூபின் பங்குகள் 1% சரிந்தன.
புதிய பிராண்டான OWND-ஐ அறிமுகப்படுத்தியதால் ஆதித்யா பிர்லா ஃபேஷன் பங்குகளின் விலை 4% அதிகரிப்பு. மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் பங்குகள் 3.7% அதிகரித்தது. ரூ.712 கோடி மதிப்புள்ள கூடுதல் ஆர்டர்களை வென்றதால் பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் 2.5% உயர்ந்தன. ஹூண்டாய் மோட்டார் இந்தியா பங்குகள் நீண்ட கால ஊதிய தீர்வு ஒப்பந்தத்தால் 2% உயர்ந்தது.
இந்தியன் வங்கி, டால்மியா பாரத், மாருதி சுசுகி, கம்மின்ஸ் இந்தியா, எல்&டி ஃபைனான்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஆதார் ஹவுசிங், ஜிடஸ் வெல்னஸ், ஆம்பர் எண்டர்பிரைசஸ், மணப்புரம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 160 பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் தொட்டது.
ஐரோப்பாவில் சந்தைகள் பெரும்பாலும் உயரந்த நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.58 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 68.07 அமெரிக்க டாலராக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.308.32 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இன்று பட்டியலிடப்பட்ட பங்குகள்
பிஎஸ்இ-யில் ஐபிஓ விலையை விட 14% பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்ட பிறகு, ஷ்ரிங்கர் ஹவுஸ் ஆஃப் மங்களசூத்ரா பங்குகள் 13% லாபத்துடன் ரூ.186.90ஆக முடிவடைந்தது.
ஐபிஓ விலையை விட 57% பிரீமியத்துடன் வலுவான அறிமுகத்தை ஏற்படுத்திய நிலையில் அர்பன் கம்பெனி பங்குகள் ரூ.168.95ஆக முடிவு.
பட்டியல் நாளில் 5.5 சதவிகிதம் உயர்ந்து முடிந்த தேவ் ஆக்ஸிலரேட்டர்.
இதையும் படிக்க: 7% அதிகரித்த தாவர எண்ணெய் இறக்குமதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.