

ஐடி பங்குகளின் விற்பனை எதிரொலியாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை வெள்ளிக்கிழமை (பிப். 13) காலை சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
தகவல் தொழில்நுட்பத்துறையில் செய்யறிவின் வருகையால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஐடி பங்குகள் நேற்றும் இன்றும் அதிகளவில் விற்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆந்தோரோபிக்கின் புதிய ஏஐ தொழில்நுட்ப அறிமுகத்தால் ஐடி துறையில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. மற்ற ஏஐ தொழில்நுட்பங்களைவிட ஆந்தோரோபிக்கின் புதிய ஏஐ துல்லியமாக வேலையைச் செய்து முடிப்பதாகக் கூறப்படுகிறது.
ஐடி துறையில் பெரும்பாலான அவுட்சோர்சிங் வேலைகளை இந்த ஏஐ சிறப்பாக செய்து முடிப்பதால் அந்த வேலைகளுக்கு ஊழியர்கள் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், ஐடி பங்குகள் கடந்த சில நாள்களாக பெரும் அடியைச் சந்தித்து வருகின்றன.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 743.65 புள்ளிகள் சரிந்து 82,931.27 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 226.90 புள்ளிகள் (0.88%) சரிந்து 25,580.30 புள்ளிகளில் தொடங்கியது.
காலை 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 800 புள்ளிகள்சரிந்து 82,190 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. கிட்டத்தட்ட ஒரு சதவிகிதத்துக்கும் அதிகமாக சரிவை சந்தித்துள்ளது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 250 புள்ளிகள் சரிந்து 25,553 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி50-யில் உள்ள முன்னணி ஐடி பங்குகளான டிசிஎஸ், ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ உள்ளிட்ட பங்குகள் 6 சதவிகிதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன.
அப்போலோ, எச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் தவிர மற்ற அனைத்துப் பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.