

மறைந்த முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலை செய்யறிவு மூலம் உருவாக்கி பயன்படுத்திய படக்குழுவினருக்கு எஸ்.பி.பியின் குடும்பத்தினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் இந்திய பாடல் உலகின் மகுடத்திற்குச் சொந்தக்காரர். மனதிற்கு இதம் சேர்க்கும் பல பாடல்களால் மக்கள் இதயங்களுக்கு சிறகை அளித்தவர்.
கடந்த 2020ஆம் ஆண்டு காலமாகிய அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்ற போதிலும், செய்யறிவுத் தொழில்நுட்பங்கள் மூலம் அவரது தேன் குரலை மீண்டும் உருவாக்க பலர் முயற்சி செய்துவந்தனர். செயற்கையாக அவரது குரலை உருவாக்கி, சில பாடல்களும் வலைதளத்தில் வலம் வந்தன.
இந்நிலையில் கீடா கோலா எனும் தெலுங்கு திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பாளருக்கும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் சட்டப்பூர்வ நோட்டீஸ் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
தங்களின் அனுமதியின்றி எஸ்.பி.பியின் குரலை செய்யறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கிப் பயன்படுத்தியாக எஸ்பிபியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. கல்யாண் சரண் கூறுவதாவது, 'முன்னேறிவரும் தொழில்நுட்பங்கள் மூலம் எஸ்.பி.பியின் குரலை மீண்டும் உருவாக்குவது அவரை மரணத்திற்குப் பின்னும் வாழ வைக்கிறது. அதை எங்கள் குடும்பம் ஆதரிக்கிறது. ஆனால் எங்களுக்குத் தெரியாமல் எங்களின் அனுமதியின்றிப் பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது' எனக் கூறியுள்ளார்.
'அதற்கு சட்டப்பூர்வ வழி உள்ளது' என அவர் கூறியுள்ளார். மேலும் அவர்கள் உண்மையை நிராகரிப்பதோடு சட்டரீதியான அணுகுமுறைக்கு பதிலாக ஊடக விசாரணைக்கு பரிந்துரைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மறைந்த பாடகர்கள் குரலை உரிய அனுமதியோடு செயற்கையாக உருவாக்கி தனது பாடல்களில் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.