கில்காமெஷின் காவியம் எழுந்த காலகட்டத்தில், பெண் தெய்வ வழிபாடு மெல்ல சரிய ஆரம்பித்திருந்தது. பொது வாழ்வில், பெண்கள் நிலையும் அவர்கள் வகித்த அதிகாரமும், சுமேரிய பண்பாட்டில் மெல்ல கீழே செல்லத் தொடங்கியிருந்தன. ஆண்-மைய ஒழுக்க விதிகள், இஷ்டர் தேவியின் கோவில் பூசாரிணிகளைத் தாசிகளாக, ஒழுக்கமில்லாத மயக்கும் பெண்களாகக் காண ஆரம்பித்திருந்தன. கில்காமெஷ், அவனை இச்சிக்கும் இஷ்டரை வெறுத்து ஒதுக்குவது, இந்தச் சமூக இயக்கத்தின் பிரதிபலிப்பு எனக் கருத இடமிருக்கிறது. கிராமங்கள் சார்ந்த நகரங்களிலிருந்து, நகரங்களை அதிகார மையமாகக் கொண்ட ராஜ்ஜியங்களுக்கு சமுதாய வாழ்க்கை நகர்ந்தபோது ஏற்பட்ட மாற்றமாக இதைக் கருத முடியுமா? (Tikva Frymer-Kensky, 'The Marginalization of the Goddess' in Gilgamesh: A Reader, Ed. John Maier, Bolchazy-Carducci, 1997, pp. 95-105). எனில், இது மேற்கத்தியப் பண்பாட்டில் ஒரு முக்கியப் பண்பாட்டு மாற்றம். இம்மாற்றம், அதற்கே உரிய உளவியல் விளைவுகளை இன்றுவரை கொண்டிருக்கிறது.