/

6. குத்துப் பாட்டிலிருந்து மெல்லிசைக்கு

வழக்கமாக, எழுதுவதற்கு முன்தான் பிள்ளையார் சுழி போடுவார்கள். போட்டுவிட்டு ஆரம்பிப்பார்கள். ஆனால், சென்ற அத்தியாயத்தில், முடிவில் அல்லவா வினாயகர் படம்

News image
Updated On :17 ஜூன் 2015, 10:11 am

செ.சு.மலரடியான்

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

Story image


நுண்பொருள் காண்ப தறிவு.

                                             (திருக்குறள் எண் : 424)

சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் மனதில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமை.

வழக்கமாக, எழுதுவதற்கு முன்தான் பிள்ளையார் சுழி போடுவார்கள். போட்டுவிட்டு ஆரம்பிப்பார்கள். ஆனால், சென்ற அத்தியாயத்தில், முடிவில் அல்லவா  வினாயகர் படம் போட்டிருந்தது என்று  சிலர் நினைத்திருக்கலாம்.

அட! போகிற போக்கில் அந்தப்படத்தில் இருந்தது, விநாயகர்  (பிள்ளையார்) என்று விடையைச் சொல்லிவிட்டேனோ!  நான் என்ன சொல்லுவது. வாசகி சங்கரி அவர்கள், சென்ற புதனன்றே எழுதிவிட்டார்.

இப்போது மீண்டும் அந்தப் படம்.

Story image


படத்தில் இருப்பது விநாயகர்தான். இதைப் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும்  கடினமான வேலை இல்லை. ஆனால், அதற்குமேலும்  இந்தப் படத்தில் கொஞ்சம் ‘விவரம்’ இருக்கிறது. 

அந்த விவரம்  என்ன என்பதைப் பார்பதற்கு முன்னால் (வழக்கம் போல!) மேலும்  சில படங்களையும் பார்த்துவிடலாம்

Story image



முதல் படத்தையும் சேர்த்து இப்போதும் மொத்தம் நான்கு படங்கள் இருக்கின்றன.  இந்த நான்கு படங்களையும் கொடுக்கப்பட்டுள்ள வரிசையிலேயே ஒவ்வொன்றாக நிதானமாகப் பாருங்கள்.

என்ன தோன்றுகிறது?

முன்பு யானை படங்களில் சொன்னதுதான். படத்துக்குப் படம் ‘விவரம்’என்ற ‘டீடெயில்’ அதிகரிக்கிறது என்பதை கவனித்திருப்பீர்கள். முதல் படத்திற்கும் நான்காவது படத்திற்கும் இடையே  இருக்கும்  விவரங்களில் ஏராளமான வேறுபாடுகள் உண்டுதானே!

முன்பு என்ன சொன்னோம்?

‘கூடுதல் விவரங்கள் இருப்பது சிறப்பு. கூடுதல் விவரங்களை படம் வரைகிறவரால் கொடுக்க முடிவதற்கு காரணம், அவரிடம் இருக்கும் விவரத்தின் அளவு. அவர் அதிகமாக சேகரித்ருக்கிறார். விவரம் சேகரிப்பவரால்தான் விவரம் கொடுக்க முடியும்’ என்று.  சரிதானே?

அந்த விதத்தில் பார்த்தால் இந்த நான்கு படங்களில் எந்தப் படம் சிறப்பானது?

இந்த இடத்தில் சிலர்  எளிதாக முடிவெடுப்பார்கள். முன்பு யானைப் படத்திற்கு சொல்லப்பட்டதை வைத்து, நான்காவது படம்தான் சிறப்பு என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

ஆனால் வேறு சிலர் உடனே பதில் சொல்லமாட்டர்கள். யோசிப்பார்கள்.

எப்படி யோசிப்பார்கள்?

‘அந்த யானை பட வரிசையில் முதல் படம் குழந்தை வரைந்தது போல, விவரம் குறைவாக, ‘யானை போல’ மட்டுமே இருந்தது.

Story image



ஆனால் நான்காவது படம் ஒரு யானையைப் புகைப்படம் எடுத்தது போல சரியான,  துல்லியமான விவரங்களுடன் இருந்தது.

Story image



ஆனால், விநாயகர் பட வரிசை  அப்படியில்லை!  இந்த நான்கு படங்களில் முதல் படம் வித்தியாசமாக இருக்கிறதே ’என்பதுபோல  யோசிப்பார்கள்.

விநாயகர் பட வரிசையில் முதல் படம் எப்படி இருக்கிறது? அதில் அப்படி என்ன வித்தியாசம் என்று  கேட்டால், ‘முதல் படமே விவரமான படம் போலத்தான் இருக்கிறது’ என்று சொல்வார்கள்.

ஏன் தெரியுமா?

பார்க்க எளிமையாக இருக்கிறதே தவிர, அது ஒரு தேர்ந்த ஓவியம். அப்படி வரைய மிக அதிகமான விவரம் வைத்திருப்பவர்கலால்தான் முடியும். அந்தப்படத்தில் அளவுகள், வளைவுகள் எல்லாம் எவ்வளவு சரியான விதத்தில் இருக்கின்றன என்பதை நீங்களும் கவனித்திருப்பீர்கள்.

வினாயகர் பட வரிசையில் முதல் படத்தில் இருப்பவை மொத்தம்  ஏழு வளைந்த கோடுகள் மற்றும் ஐந்து சின்ன புள்ளிகள் மட்டுமே. அவற்றை மட்டுமே வரைந்து, தான் தெரிவிக்க விரும்புவதைத் அந்த ஓவியர்தான் எவ்வளவு  தெளிவாக, அழகாகக் காட்டிவிட்டார்!

Story image



இதே போல குறைந்த ‘வரைதல்’ மூலமே மிகச் சிறப்பான படத்தைத் தரும் வேறு ‘சாம்பிளும்’ பார்த்துவிடலாம். இங்கேயும் நான்கு படங்கள்.

Story image

மேலே உள்ள படங்களில் இருப்பவர் யார்?

மாகத்மா காந்தி.

எல்லாமே கோடுகள் தான். மொத்தம் நான்கு படங்கள் . நான்குமே மிகக் குறைவான  ஆனால் மிகச் சரியான  விவரங்களுடனான படங்கள்.

ஓவியர்கள் மட்டுமில்லை. தேர்ந்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், நடனக்காரர்கள், நாயனக்காரர்கள், கவிஞர்கள், சமையற் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள்  எல்லாம் செய்வது இதைத்தான்.

இப்படி சிறிது கொடுத்து பெரிது செய்யும் வித்தைதான் முன்னேற்றம். ‘மச்சானைப் பார்த்தீங்களா? மலைவாழைத் தோப்புக்குள்ளே’ தொடக்கம்.  ‘உன்னைவிட…. இந்த உலகத்தில உசந்தது ஒண்ணுமில்ல..’ உச்சத்துக்கு அருகில். இளையராஜாவுக்குத்தான் எவ்வளவு பெரிய நகர்தல்!

இந்த விவரம் அறிதல்தான் வல்லவராகும் சூட்சமம். செய்யும் வேலை . கற்றுக்கொள்ளும் தொழில் அல்லது வித்தை எதுவாக இருந்தாலும் இதுதான் சூத்திரம்.விவரம்

Learning  எனப்படும் ‘அறிந்துகொள்ளுதல்’ என்பதின்  ஆரம்பநிலை- அடுத்தநிலை- உயர்நிலை என்று மூன்று நிலைகளாக நான் பார்க்கிறேன்.

கற்றலில்

அ) ஆரம்பநிலை

 

ஆ) அடுத்தநிலை

 

இ) உயர்நிலை

 

கொஞ்சமாக சொல்வது- விவரம் தெரியாமல்

நிறையச் சொல்வது விவரம் தெரிந்து

கொஞ்சம் சொல்வது- விவரம் அறிந்து(ம்)

 

Story image
Story image
Story image

எதைக் கற்றுக்கொள்ளத் துவங்கும் போதும், செய்ய ஆரம்பிக்கும் போதும்  ‘அ’ என்ற ஆரம்ப நிலையில் இருப்போம்.

மெல்ல மெல்ல அது புரிய ஆரம்பிக்கும் போது, அடுத்த  நிலையான  ‘ஆ’ விற்கு வருவோம். தொடர்ந்து செய்து பழக, உயர் நிலையான ‘இ’ விற்குப் போய்விடுவோம்.

சென்ற அத்தியாயத்தில் சொன்னது போல சிலர் முயன்று கற்றுக்கொள்ளுவதில்லை; ஊன்றி கவனிப்பதில்லை; விடாமல் பழகுவதில்லை. அதன் காரணமாக  முதல் நிலையிலேயே இருந்துவிடுகிறார்கள்.

இரண்டாவது  அத்தியாயத்தில் பார்த்த அந்த ‘குளியல் அறைக் கதவு வைத்தவர், வாஷ்பேசினில் பிளம்பிங் வேலை செய்தவர் மற்றும் கழிப்பறைக்கு பிளம்பிங் வேலை செய்தவர்கள்’ அப்படி சுமாரான வேலை செய்ததற்குக் காரணம், அவர்கள் இன்னமும்  வேலையைக் கற்றுக்கொள்வதில் ஆரம்ப நிலையிலேயே இருப்பதுதான்.

மசாலாக் குழம்பிற்கும், கொத்தமல்லி ரசத்திற்கும் இடையே என்ன வேறுபாடு?  எது சமையலில் ‘அ’ போன்றது? எது ’இ’ போன்றது?

கொஞ்சம் ‘யோசிங்க’ பாஸ்..  

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.