ஜனனிக்கும் அவள் கணவனுக்கும் மணவறையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. வைத்தியர்கள் அவள் மனநலம் இல்லாதவள் என்று முடிவு கட்டுகிறார்கள். மனநல மருத்துவமனையிலும் சிறையிலுமாகத் தண்டனைக் காலத்தைக் கழித்துவிட்டு வெளியே வருகிறாள். இம்சை பண்ணாத பைத்தியம் என்று ஊர் மக்களால் முடிவு கட்டப்படுகிறது. வீதியில் திரிகிறாள் ஜனனி. அவளை வளர்த்த குடும்பம் புல் பூண்டு இல்லாமல் போய் விட்டது. ஆனால் அவளுக்குப் பிக்ஷையிட்ட வீடுகளும் கடைகளும் செழிக்கின்றன.
முதுமை வந்து தொண்டு கிழமாகி, உடல் சுருங்கி, பல் உதிர்ந்து, தலைமயிர் வெண்பட்டாய் மின்ன… ஒருநாள் ஒரு மரத்தடியில் ஒரு மத்தியான வேளையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள் ஜனனி. மத்தியானம் பிற்பகலாகி, பிற்பகல் மாலையாகி, மாலை இரவாகி, இரவு காலை ஆகிறது. அவள் மூக்கிலும் வாயிலும் எறும்பும் ஈயும் தாராளமாய்ப் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது. அவள் எழுந்திருக்கவேயில்லை.
***

‘என் எழுத்து ஒரு நீண்ட நினைவு, மனிதப் பரம்பரையின் நினைவு. அந்த நினைவு என்னை ஒரு கருவியாக அமைத்து வடிவம் பெறுகின்றது. என் வாழ்வின் விளக்கத்தின் மூலம் உயிரின் கதியைக் காண முயல்கிறேன். (அந்த கதி பாம்பின் கதியைப் போல அழகான இரக்கமில்லாத கதி). இதில் கற்பனை என்பது இருந்தால் அது உண்மையின், நித்தியத்துவத்தின் தொடர்பாகவோ விரிவாகவோதான் இருக்க முடியும்’ என்று சொல்லும் லா.ச.ரா. மனிதனின் மரபணுவின் மூலமாக காலம்காலமாகத் தொடர்ந்து வரும் ஞாபகங்களையே கதைகளாக ஆக்கிக் கொடுத்தார். அதனால்தான் பல சமயங்களில் கதையை நான் எழுதவில்லை; தேவி எழுதுகிறாள் என்று சொன்னார்.
1932-ம் ஆண்டு, அதாவது அவருடைய 16-வது வயதில் எழுதத் துவங்கி 2007-ல் காலமாகும் வரை எழுதிக்கொண்டே இருந்தார் லா.ச.ரா. இந்த 65 ஆண்டுகளில் இருநூறு சிறுகதைகள், ‘புதர்’, ‘அபிதா’, ‘கல் சிரிக்கிறது’, ‘பிராயச்சித்தம்’, ‘கழுகு’ உள்ளிட்ட ஆறு நாவல்கள், ’பாற்கடல்’, ‘சிந்தாநதி’ ஆகிய இரண்டு வாழ்க்கை வரலாறுகள், ‘முற்றுப்பெறாத தேடல்’, ‘உண்மையான தரிசனம்’ ஆகிய இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் என்று எழுதியிருக்கிறார்.
‘ஜனனி’ போன்ற ஒரு கதை உலக மொழிகளிலே சாத்தியம் உண்டா என்று தெரியவில்லை. ஊரில் நாம் எத்தனையோ பைத்தியகாரிகளைப் பார்க்கிறோம். சரியாக உடை உடுத்தாமல், நிர்வாணமாக, பல ஆண்டுகளாகக் குளிக்காத அழுக்குத் தோலுடன், எண்ணெய் படாத முடியுடன்… அது போன்ற ஒரு பெண்ணின் கதைதான் ‘ஜனனி’. எல்லா உயிரினத்துக்கும் தாயாக இருக்கும் பராசக்தி, தான் ஒரு குழந்தையாக இருந்து முலைப்பால் குடிக்கலாம் என எண்ணி மனித உரு எடுத்தாள். என்ன ஆனது என்று பார்த்தோம்.
லா.ச.ரா.வின் மற்றொரு சிறுகதையான ‘பச்சைக் கனவு’ பற்றி வண்ணநிலவன் இப்படிச் சொல்கிறார்: ‘இது போன்ற ஒரு சிறுகதை, உலகின் வேறு எந்த மொழிகளிலும் சாத்தியமில்லை. அவரது படைப்பாற்றலின் உச்சம் ‘பச்சைக் கனவு’. நாவல்களில் ‘புத்ர’வும், ‘அபிதா’வும். நுட்பமான வேலைப்பாடு மிக்க செட்டிநாட்டு வீடுகளின் கதவுகளை உருவாக்கியது போல், லா.ச.ரா. தமது உரைநடைப் படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். ‘மந்திரம் போல் சொல் வேண்டுமடா’ என்று மகாகவி பாரதி சொன்னதை லா.ச.ரா.வும், மௌனியும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார்கள்.’
கண் தெரியாத ஒருவன் நிலவைப் பச்சையாக நினைக்கிறான். சுண்ணாம்பைப் பச்சையென்று நினைக்கிறான். மனைவியிடம் வெயில் எப்படி இருக்கும் என்று கேட்கிறான். ஐயோ, இன்னிக்கு ஏன் ஒரு தினுசாயிருக்கேள், உள்ளே வாங்கோ என்கிறாள் மனைவி. கண் தானே இல்லை; இப்போது மனமும் கெட்டு விட்டதோ என அவளுக்கு அச்சம். பிறகு வெய்யில் பச்சையாக இருக்கும் நேரம் கூட உண்டு என்று சொல்லி குளுகுளு கண்ணாடி ஒன்றைக் கொடுக்கிறாள். அவளுடைய சகோதரன் வாங்கி வந்தது. போட்டுக் கொண்டால் உங்களைக் குருடு என்று யார் சொல்லுவா? வாய் தவறி வந்து விட்டது வார்த்தை. கண்ணாடியைத் தூக்கி எறிந்து விடுகிறான். விலையுயர்ந்த கண்ணாடி உடைந்து விடுகிறது.
காலையில் கண் விழித்ததிலிருந்து கண் மூடும் வரை கைப்பிடித்தே சகலத்துக்கும் கொண்டு போய் விட வேண்டியிருக்கிறது. இத்தனை சிசுருக்ஷையின் நடுவில் பாதி நேரம் ஊமை. வாயையே திறக்க மாட்டான். திறந்தாலும் வெயில் பச்சையா, நிலா பச்சையா என்று அசட்டுக் கேள்வி.
மனைவி அவனை ஊமை என்றதும் நேற்று கண்ட கனவு ஞாபகம் வருகிறது. பட்டை வீறும் பச்சை வெயிலில் பசும் புல்தரையில் நீட்டிய கால் தாமரைக் குளத்தில் சில்லென்ற தண்ணீரில் நனைய அண்ணாந்து படுத்திருக்கிறான். பக்கத்தில் அவன் உறுப்பு உறுப்பாய்த் தொட்டு உள்ளந்திரிபு அற உணர்ந்ததோர் உருவம் படுத்திருந்தது. கட்டவிழ்ந்து சரிந்த பசுங்கூந்தலிலிருந்து முகத்தில் அலைமோதும் பிரி. அவனையே அள்ளி உண்ணும், பசுமை நிறைந்து, தாமரைக் குளம் போன்ற கண்கள்.
அவனுக்குக் கண் இருந்தபோது அவன் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அதனாலேயே அந்த நிறம் அவனைப் பற்றிக்கொண்டு விட்டது. அப்போது அவனுக்குப் பத்து வயது இருக்கும். அப்போதுதான் தாயை இழந்திருந்தான். மல்லாந்து படுத்து சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தால் பச்சையாக இருந்தது. தாயையும் இழந்திருந்த நிலையில் அந்த விளையாட்டு அவனுக்குப் புதுமையாக இருந்தது. ஆனால் அதை அவன் மூன்று நாள்களே விளையாட முடிந்தது. கண்களில் சூர்ய கோளம் தாம்பாளம் போல் சுழன்றுகொண்டே இருந்து திடீரென்று பார்வை போய்விட்டது. அதற்குப் பிறகு பார்வை மீளவில்லை.
சிறுவனாக இருந்தபோதே அவனுக்குப் பால்ய விவாகம் செய்து வைத்து விடுகிறார் தந்தை. சாரதா சட்டம் அமுலுக்கு வரும் முன்பே அவசர அவசரமாக நடத்திவைத்த திருமணம். அப்போது அவனுக்குக் கண் இருந்தது. ஆனால் கல்யாணம் ஆன பிறகுதான் தெரிந்தது, பெண் ஊமை. காதும் செவிடு. சிறுவனின் தந்தை சீர்வரிசையோடு பெண்ணையும் அவள் வீட்டுக்கே திருப்பி அனுப்பி விட்டார். பையனுக்கு மறுமணம் செய்வதற்குக் கூட முயன்றார். அதற்குள் அவன் கண்ணை அவித்துக் கொண்டான். மாமனாருக்கு சந்தோஷம். குருட்டு மாப்பிள்ளைக்கு ஊமைப் பெண் குறைந்து போயிற்றா?
கண் இல்லாதவர்களின் உலகம் எப்படி இருக்கும்? ஒருநாள் குளக்கரையில் மதிய வேளையில் அவன் பின்னால் யாரோ. யாரது? பதில் இல்லை. அவன் மேல் ஒரு கை படுகிறது. அப்பொழுது அவன் வயது பதினெட்டு. அன்று முதல் குளக்கரையில் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அவனால் அவளைப் பார்க்க முடியாது. அவளோ வாயைத் திறப்பதில்லை. வண்ணநிலவன் சொல்வது உண்மைதான். இப்படி ஒரு கதை உலக மொழிகளிலே சாத்தியம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இதோ மீதிக் கதை. குளக்கரையில் பசும் புல்தரையில் நாள் தவறாது உட்கார்ந்து உட்கார்ந்து என்னுள் ஊறிய பச்சைத் தாபமே என்னையுமறியாது மாறிமாறித் தோன்றும் குருட்டுக் கனவாயிருந்தாலோ? ஓஹோ, நீ கண்டது குருட்டுக் கனவானால் நான் கண்டது ஊமைக் கனவோ என அவள் உரு, என் காணாத கண்கள் காண, பேசாத வாயால் என்னைக் கேட்கிறது.
என் கைமேல் இரண்டு சொட்டு கண்ணீர் விழுகிறது. அவள் என் கைகளைப் பற்றித் தன் வயிற்றில் வைத்துக்கொண்டாள். அவள் பச்சை வயிறு ஏன் கொதித்ததோ? என் மேல் சாய்ந்திருந்த அவள் உடல் விம்மிக் குலுங்கிற்று.
மறுநாள் அவன் தந்தையால் விலக்கி வைக்கப்பட்டிருந்த அவன் மனைவி விஷப்பூண்டைக் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாள். மருத்துவர் வந்து வயிற்றைக் கிழித்தால் வயிற்றில் மூன்று மாத சிசு. ஊரே பற்றி எரிந்தது. அப்பா நடுங்கிப் போனார். இதைத்தான் நேற்று அவள் தெரிவிக்க முயன்றாளோ? இதுதான் என்று அவள் தெரிவிக்க முயன்றபோது எனக்குத் தெரியவில்லையோ? ஊராரிடம் அந்தக் குழந்தை என்னுடையது என்று அவன் சொல்லவில்லை. சொல்லி அவள் கற்பைக் காப்பாற்றி என்ன ஆகப்போகிறது? தாங்கள் இருவரையும் வாழ விடாத இந்த சமூகத்திடம் உண்மையைக் கூற அவனுக்கு விருப்பமில்லை. அவள் பெயருக்கு விழுந்த களங்கம் நீங்காவிட்டாலும் பரவாயில்லை. உயிருடனிருந்த சமயத்தில் எங்கள் பாரத்தைக் குறைக்க யார் என்ன செய்து விட்டார்கள். செத்த பிறகு அவள் தலையில் பூச்சாடாவிட்டால் என்ன?
எல்லா கதையையும் தன் மனைவியிடம் சொல்லும் அவன், அந்த மூன்று மாதப் பச்சைக் கனவின் மிச்சம் நான் தான் என்கிறான்.
***
‘பாற்கடல்’ என்ற ஒரு அற்புதமான கதை. இளம் பெண் ஜகதா தலைத் தீபாவளியின்போது தன் அருகில் இல்லாமல் ஊருக்குப் போய்விட்ட கணவனுக்கு எழுதும் கடிதம். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த குடும்ப அமைப்பின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு கதை. இதுவும் உலக மொழிகளிலே சாத்தியமில்லாத கதைதான். வாய் கொப்புளிக்க செம்பில் மனைவி கையிலிருந்து ஜலம் வாங்கும்போது கூட சுற்றும் முற்றும் பார்க்கும் கணவன். தீபாவளிக்கு இரண்டு நாள்கள் முன்பு ஜகதாவின் பெற்றோர் வந்து அவளை அழைக்கிறார்கள். கணவனும் வேலை விஷயமாக வெளியூர் போய் விட்டதால் போகலாம் என ஆசைப்படுகிறாள். ஆனால் இனிமேல் ஜகதா எங்கள் வீட்டுப் பெண்ணாயிற்றே என்கிறாள் மாமியார். ‘ஆனால் அவள் கிளம்பினால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். அவள் இஷ்டம்.’ இது ஜகதாவுக்கு வைக்கப்பட்ட பரீட்சை. தன்னைப் பிரிந்து ஒரு நிமிடம் கூட இருந்திராத தன் தம்பி சீனுவைப் பார்க்க வேண்டுமென்று அடித்துக் கொள்கிறது ஜகதாவுக்கு. ஆனாலும் போக மறுத்து விடுகிறாள். மாமியாரின் பரீட்சையில் பாஸ்.
பெண்களுக்கு மட்டும்தான் சுதந்தரம் இல்லை என்று யார் சொன்னது? ஆண்களுக்கும்தான் சுதந்திரம் இல்லை. இதோ விசேஷ நாள் அன்று கூட வீட்டில் இருக்க முடியாமல் அலைகிறான் கணவன். எல்லோரும் சேர்ந்து ஒரு சிறைக்கூண்டில் இருக்கிறோம். போகிற சமயத்தில் என்னிடம் வந்து, ‘ஜகதா, நான் போயிட்டு வரட்டுமா?’ என்று ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போனால், தலையைச் சீவி விடுவார்களா? அதையும்தான் பார்த்து விடுகிறது; என்ன ஆகிவிடும்? சாந்தியைத் தைக்குத் தள்ளிப்போட்டு விட்டாலும் வாய் வார்த்தை கூட பேசிக்கக் கூடாது என்றால் பிள்ளைகள் கல்யாணம் பண்ணிக் கொள்வானேன்? இந்த வீடே வேடிக்கையாய்த்தானிருக்கிறது.
கூட்டுக் குடும்பம் எப்படி இருந்தது என்பதற்கு அதில் ஒரு காட்சி. ஜகதா அழுது கொண்டு அமர்ந்திருக்கிறாள். கல்யாணம் ஆகி இன்னும் சாந்தி முகூர்த்தம் கூட ஆகவில்லை. கணவன் வெளியூரில் இருக்கிறான். ஒரு வார்த்தை பேசியதில்லை. பெற்றோருடனும் போக முடியவில்லை. மாமியார் வந்து என்னடி குட்டி என்கிறார்.
‘ஒண்ணுமில்லையே அம்மா!’ என்று அவசரமாகக் கண்ணைத் துடைத்துக் கொண்டேன். ஆனால் மூக்கை உறிஞ்சாமல் இருக்க முடியவில்லை.
‘அடாடா! கடுஞ் ஜலதோஷம். மூக்கையும் கண்ணையும் கொட்டறதா? ராத்திரி மோர் சேர்த்துக்காதே.’ (கபடும் கருணையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும்போது, அதுவும் ஒரு அழகாய்த்தானிருக்கிறது!) ‘என்னவோ அம்மா, புதுப் பெண்ணாயிருக்கே; உன் உடம்பு எங்களுக்குப் பிடி படறவரைக்கும் உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ- அட; குட்டி இதென்ன இங்கே பாருடீ!’
அம்மா ஆச்சரியத்துடன் கிணற்றுள் எட்டிப் பார்த்தார். அவசரமாக நானும் எழுந்து என்னவென்று பார்த்தேன்; ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.
‘ஏ குட்டி, எனக்குத்தான், கண்சதை மறைக்கிறதா? கிணற்றில் ஜலம் இருக்கோ?’
‘இருக்கிறதே!’
‘குறைஞ்சிருக்கா?’
‘இல்லையே, நிறைய இருக்கே!’
‘இருக்கோன்னோ? அதான் கேட்டேன்; அதான் சொல்ல வந்தேன். கிணற்று ஜலத்தை சமுத்திரம் அடித்துக் கொண்டு போக முடியாதுன்னு! நேரமாச்சு. சுவாமி பிறையின் கீழ் கோலத்தைப் போடு’ என்று குறுஞ்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.
அப்போது நினைத்துப் பார்க்கிறாள் ஜகதா. எங்கோ தொலைதூரத்தில் கேம்ப் என்று சொல்லி உட்கார்ந்திருக்கிறீர்கள். நெருப்பு என்றால் வாய் வெந்து விடாது. நீங்கள் திரும்பி வருவதற்குள் எனக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால் என்ன ஆவது? நினைக்கக்கூட நெஞ்சு கூசினாலும், நினைக்கத்தான் செய்கிறது. உங்களைப் பற்றியும் அப்படித்தானே? அந்தந்த நாள் ஒரு ஒரு ஆயுசு என்று கழியும் இந்த நாளில், நாமிருவரும், இவ்வளவு சுருக்க, இவ்வளவு நாள் பிரிந்திருக்கும் இந்தச் சமயத்தில், நம்மிருவரிடையிலும் நேர்ந்திருக்கும் ஒரு ஒரு பார்வையிலும், மூச்சிலும் தாழ்ந்த ஒன்றிரண்டு பேச்சுக்களும், நாடியோ, அகஸ்மாத்தாவோ, ஒருவர் மேல் ஒருவர் பட்ட ஸ்பரிசமோ, நினைவின் பொக்கிஷமாய்த்தான் தோன்றுகிறது. நாங்கள் அம்மாதிரி பொக்கிஷங்களைப் பத்திரமாய்க் காப்பாற்றுவதிலும் அவைகளை நம்பிக் கொண்டிருப்பதிலும்தான் உயிர் வாழ்கிறோம்.
யாரேனும் ரொம்ப வயதானவர்கள் சாலையில் போனால் அப்படியே ஒருக்கணம் நின்று அவரை வணங்குவாராம் லா.ச.ரா. ஜகதாவின் தகப்பானாரும் அப்படித்தான். வாழ்க்கையிலிருந்து தான் எல்லாவற்றையுமே எழுதியிருக்கிறார் லா.ச.ரா. ஏன் அப்படி வணங்குகிறீர்கள் என்று கேட்டால், ‘இந்தக் கிழவனார் வயது நான் இருப்பேனா என்று எனக்கு நிச்சயமில்லை. இந்த நாளில் இத்தனை வயசு வரைக்கும் இருக்கிறதே, காலத்தையும், வயசையும் இவர்கள் ஜயம் கொண்ட மாதிரிதானே? இவர்களுடைய அந்த வெற்றிக்கு வணங்குகிறேன்’ என்று வேணுமென்றே குரலைப் பணிவாக வைத்துக்கொண்டு அப்படிச் சொல்கையில், ஏதோ ஒரு தினுசில் உருக்கமாயிருக்கும்.
கூட்டுக் குடும்பத்தில் அப்பா (மாமனார்), அம்மா (மாமியார்), அப்பாவின் அம்மா (மாடியை விட்டு இறங்கவே இறங்காத பாட்டி), மற்றும் கணவனின் மூன்று சகோதரர்கள், அவர்களின் மனைவிகள் (ஒரு சகோதரன் இறந்து விட்டான்; அவன் மனைவியும் குழந்தையும் இங்கேதான் இருக்கிறார்கள்), கல்லூரி செல்லும் ஒரு தங்கை. பாட்டியை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு முழுவதும் ஜகதாவின் மாமியாருடையது. மலஜலமெல்லாம் அள்ள வேண்டும்.
அப்பாவுக்கு என்ன, இந்த வயசில் இவ்வளவு கோபம் வருகிறது! ஒரு புளியோ, மிளகாயோ, துளி சமையலில் தூக்கி விட்டால், தாலத்தையும், சாமான்களையும் அப்படி அம்மானை ஆடுகிறாரே! கண்கள் எப்பவும் தணல் பிழம்பாவேயிருக்கின்றன. அம்மா சொல்கிறார்: ‘என்ன செய்வார் பிராம்மணன்? உத்தியோகத்திலிருந்து ‘ரிடையர்’ ஆனபிறகு பொழுது போகவில்லை. ஆத்தில் அமுல் பண்ணுகிறார். ஆபிஸில் பண்ணிப் பண்ணிப் பழக்கம்! இனிமேல் அவரையும் என்னையும் என்ன செய்கிறது? எங்களை இனிமேல் வளைக்கிற வயசா? வளைத்தால் அவர் ‘டப்’பென முறிஞ்சு போவார். நான் பொத்தைப் பூசணிக்காய் ‘பொட்’டென உடைஞ்சு போவேன். நாங்கள் இருக்கிறவரைக்கும் நீங்கள் எல்லாம் ஸஹிச்சுண்டு போக வேண்டியதுதான்.
குடும்பம் என்பது ஒரு க்ஷீராட்சி. அதிலிருந்துதான் லக்ஷ்மி, ஐராவதம், உச்ரவஸ் எல்லாம் உண்டாகிறது. ஆலகால விஷமும் அதிலிருந்துதான்; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதில்தான். எனக்குத் தோன்றுகிறது. நானும் நீயுமிருலிருந்து பிறந்து பெருகிய குடும்பத்தில் நானும் நீயுமாய் இழைந்து மறுபடியும் குடும்பத்துக்குள்ளேயே மறைத்துவிட்ட நானும் நீயின் ஒரு தோற்றசாக்ஷிதான் தீபாவளியோ? குடும்பமே நானும் நீயாய்க் கண்டபின், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?’
மலைக்கோட்டை மேல் உச்சிப் பிள்ளையார் எழுந்தருளியிருப்பது போல் பாட்டி மூன்றாம் மாடியில் எழுந்தருளியிருக்கிறார். அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரியவில்லை. பாட்டிக்குத் தொந்தரவு கொடுக்கலாகாது எனக் குழந்தைகளுக்கு மூன்றாம் மாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு யாரும் அண்டக்கூடாத ப்ரகாரம். ஆறுகால பூஜைபோல், அம்மா பாரி சரீரத்தை தூக்கிக்கொண்டு, குறைந்தது நாளைக்கு ஆறு தடவையாவது ஏறி இறங்குகிறார். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிறார். அது கஞ்சியா, கூழா, புனர்ப்பகமா, சாதமா- எதுவுமே எங்களுக்குச் சரியாத் தெரியாது. அதை ஒரு தட்டிலே, நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக் கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென பற்றிய மஞ்சளுடன், நெற்றியில் பதக்கம் போல் குங்குமத்துடனும், ஈரம் காயத் தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடியேறுகையில் எனக்கு உடல் புல்லரிக்கிறது.
சில சமயங்களில் அம்மா, அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள், ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவது போல். ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில், ‘சடக்’கென்று அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டேன். அம்மா முகத்தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும்புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது.
தீபாவளிக்காக அம்மா ஜகதாவின் பாதங்களுக்கு மருதாணி இடுகிறார். அப்போது அவள் பாதங்களில் அம்மாவின் கண்ணீர் சுடுநீர் போல் விழுகிறது. பதறிப் போகிறாள் ஜகதா. அம்மாவுக்கு ஜகதாவைப் போலவே ஒரு மகள் இருந்தாளாம். சிறிய வயதில் வியாதியில் இறந்து விட்டாள். அவள் ஞாபகம் ஜகதாவின் பாதங்களைத் தொட்டபோது அம்மாவுக்கு வந்திருக்கிறது.
அடுத்தாற்போல் தீபாவளிக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து கொள்ள பாட்டி மாடியிலிருந்து கீழே வரப் பிரியப் படுகிறாள். தொட்டால் பிய்ந்து விடும் போன்ற தோல் என்பதால் விசேஷ நாட்களில் மட்டுமே குளியல். பாட்டி கீழே வரும் இடத்தை லா.ச.ரா. எழுதியிருப்பதை என்னவென்று சொல்வது! லா.ச.ரா.வே சொல்வது போல் தேவிதான் இதையெல்லாம் எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. அந்த இடத்தை மேற்கோள் காட்டத் தயங்குகிறேன். வெறும் மேற்கோள்களாகவே இருக்கிறதே என்கிறார் நண்பர் ஒருவர். என்ன செய்வது? தெய்வத்தைப் பார்த்த பரவசம் அது என்றே கொள்ள வேண்டும்.
திடீரென்று சிறுவன் சேகரின் அழுகுரல் கேட்கிறது. செத்துப் போன மகனான இரண்டாமவரின் புதல்வன். சேகரின் அம்மா காந்தி அவனைப் பலமாக அடித்து விடுகிறாள். கன்னத்தில் ஐந்து விரல்களும் பதிந்து விட்டன. பார்த்தால் காந்தி மன்னிக்கு வெறி வந்து இருக்கிறது. அம்மாவைப் பார்த்துக் கூட எழுந்து கொள்ளவில்லை. ஜகதா புருஷனின் இரண்டாவது அண்ணா தீபாவளிக்கு சீனி வெடி வாங்கப் போனவன் வெடிக் கடை தீ விபத்தில் மாட்டி இறந்து போனான். முகம் இருந்த இடத்தில் முகமே இல்லை. அங்கே வெறும் துணிப்பந்தைப் போட்டுத்தான் கொண்டு வந்தார்கள். அப்போது சேகர் காந்தி மன்னி வயிற்றில் மூன்று மாதம். அப்படியானால் கல்யாணமாகி ஆறு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. அன்றிலிருந்து மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை காந்தி மன்னிக்கு வெறி பிடிக்கும். மூன்று நாட்களுக்கு ஒரு அறையில் போய் உட்கார்ந்து கொள்வாள். யாரிடமும் பேச மாட்டாள். சேகரின் வயது இப்போது ஏழோ எட்டோ. (இந்த இடத்தில் நாம் தஞ்சை ப்ரகாஷின் ‘கரமுண்டார் வூடு’ நாவலில் வரும் பெண்களைப் பற்றி நினைவு கூர வேண்டும்.)
‘ஏண்டி காந்தி, இப்படிப் பச்சைக் குழந்தையை அடித்தாய்? என் பிள்ளை நினைப்புக்கு, இவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ. ஏன் இன்னிக்குத் தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தைக் கொண்டாடிக்க? நானும் தான் பிள்ளையத் தோத்துட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி எறிஞ்சுட்டு வளையவில்லை?’ என்கிறாள் அம்மா. அதற்கு காந்தி சொல்லும் பதிலில் இத்தனை நூற்றாண்டுகளாகப் பெண்கள் பட்ட வேதனையெல்லாம் சேர்ந்து தீயாய்க் கனன்று எரிகிறது. காந்தி கேட்கிறாள்: உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ?
குழந்தையைக் கீழேயிறக்கி விட்டு நேரே மருமகளை வாரியணைத்துக் கொண்டார் அம்மா. மன்னி பொட்டென உடைந்து போனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக் கொண்ட குழந்தைக்கு மேல் விக்கி விக்கி அழுதாள். அம்மா கண்கள் பெருகின. மருமகளின் கூந்தலை முடித்து நெற்றியில் கலைந்த மயிரைச் சரியாய் ஒதுக்கிவிட்டார்.
‘காந்தி, இதோ பார், இதோ பாரம்மா.’
லா.ச.ரா.வின் நாவல்களைப் படித்தவர்கள் அனைவருமே அவர் மொழியில் ஒருவித லகரி இருப்பதாக உணர்கிறார்கள். அதுபற்றி அடுத்தப் பகுதியில் காண்போம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

