பொய்த்தேவு, ஆட்கொல்லி, அவரவர் பாடு, ஒருநாள், பித்தப்பூ, அவதூதர், சர்மாவின் உயில், அசுர கணம், வாழ்ந்தவர் கெட்டால், கோதை சிரித்தாள் ஆகிய பத்து நாவல்கள் மட்டுமே எனக்கு வாசிக்கக் கிடைத்தது. இது எல்லாமே – ‘அவரவர் பாடு’ என்ற மர்ம நாவல் உட்பட – ஒரே நாவலின் பல்வேறு பகுதிகள் என்றே சொல்லத் தோன்றுகிறது. எல்லா நாவல்களிலுமே ஒரே கதாபாத்திரங்கள்தான் வந்து போகிறார்கள். ‘பொய்த்தேவு’ நாவலில் சோமு முதலி நாயகன் என்றால் இன்னொரு நாவலில் அவனுடைய கதை செவிவழிச் செய்தியாக வந்து போகிறது. க.நா.சு.வின் தந்தை பெயர் நாராயணசாமி. போஸ்ட்மாஸ்டராக இருந்தவர். இவர் க.நா.சு.வின் எல்லா நாவல்களிலும் போஸ்ட்மாஸ்டர் நாணா ஐயராக வந்து போகிறார். ‘பித்தப்பூ’வில் நாணா ஐயரின் அறிமுகம் இப்படி:
‘தெருவிலிருந்த இருபது இருபத்தைந்து வீடுகளிலும் அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏறி இறங்கித் துண்டைப் போட்டு, திண்ணையில் சாய்ந்து கொண்டிருந்து விட்டு வருபவர் அதிகமாக ரிடையர்டு போஸ்ட்மாஸ்டர் நாணா ஐயர்தான். பல தடவைகள் துண்டை எங்கே விட்டோம் என்று தெரியாது – சாயங்காலம் மறுபடி ஒருதரம் வீடு வீடாகப் போய் தேடிக் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு வந்து விடுவார். நாணாவிற்குப் பொடி போடுகிற பழக்கம். யார் கும்பகோணத்திற்குப் போகிறேன் என்று கிளம்பினாலும் ’கால் ரூபாய்க்கு எனக்கு ஒரு மட்டை பட்டணம் பொடி வாங்கிண்டு வந்து தாயேன்’ என்று சொல்லிக் கால் ரூபாயைக் கொடுத்து விடுவார்.’
க.நா.சு. நாவல்கள் அனைத்திலும் சில பொதுத் தன்மைகளைக் காண முடிகிறது. ஒன்று, ‘பித்தப்பூ’ தவிர மற்ற நாவல்கள் அனைத்தும் கும்பகோணத்துக்கு நான்கு மைல் தூரத்தில் உள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில்தான் நடக்கின்றன. (‘பித்தப்பூ’ தில்லியில்.) இரண்டு, நாவல்கள் எல்லாமே சுயசரிதைத் தன்மை கொண்டவையாக உள்ளன. எல்லா நாவல்களிலுமே க.நா.சு. எழுத்தாளராக வருகிறார். தந்தைக்கு ஒரே பையன். தந்தையே மகனை எழுத்தாளனாக ஆக்குகிறார். ‘பித்தப்பூ’வில் க.நா.சு. எழுத்தாளர் க.நா.சுப்ரமணியமாகவே வருகிறார். மகள் பெயர் பாப்பா. மகளின் கணவர் பெயர் மணி. (க.நா.சு.வின் மருமகனின் பெயர் மணி. பாரதி மணி என்ற பெயரில் எழுதுகிறார்; பிரபலமான நடிகரும் ஆவார்.) ‘பித்தப்பூ’வில் தி. ஜானகிராமனும் வருகிறார்.

எல்லா நாவல்களிலும் நாயகனாக வரும் எழுத்தாளர், சர்க்கரை அதிகம் போட்டு ஸ்ட்ராங்க் காஃபி குடிக்கிறார். (க.நா.சு. ஒரு காஃபி பைத்தியம்.) பணத்துக்குக் கஷ்டப்படுகிறார். வெறும் கஷ்டம் அல்ல. தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க.நா.சு.
‘என் மனைவி ராஜியைக் கொண்டு போய் அவள் பிறந்தகத்தில் விட்டுவிட்டு நான் சென்னையில் ஒரு டைப்ரைட்டருடன் குடியேறினேன். தங்கசாலைத் தெருவில் ஒரு ஹோட்டலில் – அதற்கு ஹிண்டு ஹோட்டல் என்று பெயர் என எண்ணுகிறேன் – குடியேறினேன். ஜர்னலிஸம் பண்ணி பத்திரிகைகளுக்குத் தாராளமாக எழுதி ஏராளமாகச் சம்பாதித்து விடுவதாக நினைப்பு. சம்பாத்தியம் எதுவும் வரவில்லை என்பது மட்டுமல்ல. என் சிறப்பான எழுத்துகளையும் ஒருவரும் போடவில்லை.’
***
‘என் அப்பா, அண்ணா எல்லோரையும் பற்றி எழுதியிருக்கிறீர்களே, உங்கள் மேல் கேஸ் தான் போட வேண்டும்’ என்றான் தியாகு. ‘கேஸ் போடப்பா, அப்படியாவது என் புஸ்தக விற்பனை கூடுகிறதா பார்க்கலாம். கேஸ் கீஸ் என்று ஏதாவது வந்து அமர்க்களப்பட்டு பெயர் அடிபட்டால்தான் என் புஸ்தகம் விற்பனையாகும் போல் இருக்கிறது’ என்றேன் நானும் விளையாட்டாக.
‘என்னைப் பைத்தியம் என்று என் மனைவியே சொல்லுகிறாள் சார்!’
‘என்னைக் கூடத்தான் என் மனைவி பைத்தியம் என்று சொல்கிறாள்!’
‘எதற்காக?’
‘நான் மற்றவர்களைப் போல வேலைக்குப் போகவில்லையாம். மாதாமாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் தரவில்லையாம்! ஒருத்தரும் படிக்காத எதையோ எழுதிக் கொண்டு எழுத்தாளன், இலக்கியம் என்று அசட்டுத்தனமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கிறேனாம்.’
‘இதெல்லாம் பைத்தியத்திற்கு அறிகுறியாகி விடுமா?’
‘நீ தான் சொல்லேன் என் மனைவிக்கு.’
‘நான் நடத்திக் கொண்டிருந்த சிறுபத்திரிகைக்கு விளம்பரம் தேடிக் கொண்டு கோவை போயிருந்தபோது…’
‘நீங்கள் எப்படி ஆயுள் பூராவும் எழுத்தாளராகவே இருந்தீர்கள்? எப்படி அது சாத்தியமாயிற்று?’ என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள். வேலையை விட்டு விட்டு சுதந்தரத்தை நான் காப்பாற்றிக் கொண்டது உண்மைதான். ஆனால் எத்தனை கஷ்டப்பட வேண்டியிருந்தது தெரியுமா? எத்தனை தியாகங்கள்? Even today… போதும் போதாததுமாக வருகிற பணத்தை வைத்துக் கொண்டு எப்படி அடுத்த வாரம் மானேஜ் பண்ணப் போகிறோம், அடுத்த மாதம் எப்படி என்று தெரியாமல் அவஸ்தைப்படுவது ஒருநாளா இரண்டு நாளா…?’
‘எழுத்தாளனாக இருப்பதும், சித்திரம் வரைவதும் அவனுக்கெதற்கு? பேசாமல் கை நிறையச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு உத்தியோகத்தைக் காப்பாற்றிக் கொண்டால் போதாதா?’ என்று க.நா.சு.வின் மனைவி அவரிடம் சொல்கிறார். அது பற்றிய வருத்தத்துடன் க.நா.சு. எழுதுவது:
‘ஒரு எழுத்தாளனுடன் சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேல் காலம் தள்ளிவிட்ட என் மனைவிக்கு எழுத்து, கலை என்று பெரிதாகச் சொல்லப்படுவதன் தரம் நன்றாகவே தெரியும்!’
பாப்பாவுக்கு – அதாவது க.நா.சு.வின் மகளுக்கு டெல்லியில் கல்யாணம் நிச்சயமாகிறது. மகளே பார்த்துக் கொண்ட மாப்பிள்ளை. மகளும் மாப்பிள்ளையுமாக செலவு செய்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள். க.நா.சு.விடம் பணம் இல்லை. ‘உங்கள் அப்பா தந்த பணத்தையெல்லாம் வைத்திருந்தால்…?’ என்று குத்திக் காட்டுகிறார் மனைவி. இனி க.நா.சு.:
‘அதெல்லாம் இப்போ பேசி என்ன லாபம்? யார் யாரையோ கடன் கேட்டேன். அவர்கள் கொடுத்திருந்தால் நான் எப்படித் திருப்பிக் கொடுத்திருக்கப் போகிறேன்? ஒரு குஜராத்தி எழுத்தாளர், ஒரு ஹிந்தி எழுத்தாளர் இருவரும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். ஒரே ஒரு தமிழ் எழுத்தாளர் (தி. ஜானகிராமன்) ஒரு எழுநூற்றியைம்பது ரூபாய் கொடுத்து உதவினார். இதில் ஐநூறு இரண்டொரு மாதத்தில் திருப்பித் தந்து விட்டேன். பாக்கி 250 அவரே ’சிரமப்படாதே, வேண்டாம்’ என்று சொல்லி விட்டார்.’ இந்த மேற்கோள்கள் அனைத்தும் ‘பித்தப்பூ’ நாவலிலிருந்து.
க.நா.சு.வின் ஒவ்வொரு நாவலுமே இவ்வளவு அந்தரங்கமாகத்தான் இருக்கிறது. ‘பித்தப்பூ’வின் முன்னுரையில் எழுதுகிறார்: ‘எல்லாச் சம்பவங்களும் கற்பனை, பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக, இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் எனக்குத் தெரிந்த வரையில் முழு உண்மை.’ இது ‘பித்தப்பூ’வுக்கு மட்டும் அல்ல; க.நா.சு.வின் எல்லா நாவல்களுக்கும் பொருந்தும். முக்கியமாக ‘சர்மாவின் உயில்’. இந்த நாவலில் எழுத்தாளன் சிவராமன், இலக்கியம் தெரியாத, இலக்கியத்தை மதியாத அவன் மனைவி ராஜம், நல்ல இலக்கிய ரசனையும் சிவராமனைப் போலவே எழுதக் கூடியவளுமான அவனுடைய அத்தைப் பெண் பவானி மூவருக்குமான உறவுப் போராட்டம் ஒரு முக்கியமான சரடாக ஓடுகிறது. நாவல் முழுவதுமே ராஜமும் அவளது பெற்றோரும் சிவராமனையும் அவன் எழுத்தையும் அவமதித்துக் கொண்டே இருக்கிறார்கள். ‘என்ன எழுத்து வேண்டிக் கிடக்கு எழுத்து! நூறு ரூபாய் சம்பளத்தையும் விட்டுத் தொலைத்து விட்டு வந்து, ராப்பகலாத் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டு உடம்பு கெட…’ என பிரசங்கம் செய்கிறாள் பவானியின் தாய். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகப் போகும் சிவராமன் ஓரிரு சமயங்களில் ‘நீ ஒரு இலக்கியாசிரியனின் மனைவியாக இருப்பதற்கே லாயக்கற்றவள்’ என்று ராஜத்தைப் பார்த்துக் கத்துகிறான். ‘ஆனாலும் அவர்கள் சொல்வதெல்லாம் ஒருவிதத்தில் நிஜம்தான் என்று அவனே ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. இலக்கியத்துக்காக அவன் எவ்வளவு தியாகங்கள் செய்து விட்டான்! நல்ல உத்தியோகம், பொருள், காலம் எல்லாவற்றையும் இலக்கிய தேவியின் பாத கமலங்களில் சமர்ப்பித்து விட்டு நின்றான். லாபம் என்ன? பைத்தியக்காரன் என்ற பட்டம். அவ்வளவுதான் கண்ட லாபம்!’
1938-ல் க.நா.சு. இப்படி எழுதினார். ஆனால் 1988-ல் அவர் மரணம் அடையும்போது உலகம் அவர் எழுதிய எல்லா நாவல்களையும் சுத்தமாக மறந்து விட்டு வெறுமனே விமரிசகர், மொழிபெயர்ப்பாளர் என்று அழைத்தது. பைத்தியம் என்ற பட்டத்தை விட ஒருவரை இல்லாமலே அடித்து விடுவது அதைவிட மோசம் அல்லவா? க.நா.சு. எழுதி இதுவரை வெளிவராத நாவல்கள் இன்று யாரிடம் உள்ளன? அவற்றை யார் வெளியிடுவார்? சாகித்ய அகாதமிக்காக தஞ்சை ப்ரகாஷ் எழுதிய நூலைக் கூட என்னால் எவ்வளவு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. எதற்குமே மறுபதிப்பு கிடையாது.
‘ஆறு மாதங்களுக்கு முன், தன் சொந்தக் காசு போட்டு சிவராமன் நாவல் ஒன்று பிரசுரம் செய்தான். ‘அந்த இருநூறு ரூபாய்க்கு எனக்கு ஒரு ஜோடி வைர டோலக் வாங்கியிருக்கலாமே’ என்பது ராஜத்தின் கட்சி. அந்த நாவலைப் பத்திரிகைகளும் சில நண்பர்களும் வானளாவப் புகழ்ந்தும், விற்றது ஏதோ நூறு நூற்றைம்பது பிரதிகள்தாம். எஞ்சிய பிரதிகள் எல்லாம் அவன் வீட்டில் சிதறிக் கிடந்தன.’
‘அவனால் சம்பாதிக்க கையாலாகவில்லை என்பது உண்மைதான். உண்மையைச் சொன்னாளே என்று ராஜத்திடம் கோபித்துக் கொள்வதால் பயன் என்ன? விழுந்து விழுந்து எழுதினாலும் ஒரு மாதத்தில் இரண்டு மூன்று கதைகளே எழுத முடிந்தது. புஸ்தகங்களாக எழுதினால் போடுவதற்கு ஆள் தேடிக் கொண்டு தெருத்தெருவாக அலைய வேண்டும். இந்த நிலைமையில் மாதம் ஐம்பது ரூபாய் சம்பாதிப்பதே சிரமம். இருநூறு முந்நூறு என்று செல்வாகிக் கொண்டிருந்த இடத்தில் இந்த ஐம்பது கடலில் பெருங்காயம் கரைத்த மாதிரிதான்…’
இப்படியாக ‘சர்மாவின் உயில்’ முழுக்கவும் தமிழ்நாட்டில் எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைப் பற்றி ரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறார் க.நா.சு. சமூகத்தை விடுங்கள்; ஒரு எழுத்தாளனுக்கு குடும்பத்தில் கிடைக்கும் அவமரியாதையைப் பக்கம் பக்கமாக எழுதுகிறார். சங்க காலத்திலிருந்து எழுத்தாளனின் நிலைமை தமிழ்நாட்டில் இதுதான். இன்னொரு உதாரணம்:
‘என்ன, மறுபடியும் கண்ணை மூடிண்டு கதையைப் பற்றி யோசனை பண்ண ஆரம்பிச்சுடேளா? இலையிலே சாதம் போட்டு ஆறிண்டிருக்கு. கதை எழுதிக் கிழிச்சது போறும். வாங்கோ!’ என்று சொல்லிக் கொண்டே ராஜம் வந்தாள்.
‘பசி கூட வந்துடுத்து எனக்கு’ என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே எழுந்தான் சிவராமன்.
‘காலையிலே வேலை வெட்டிப் புரட்டியிருக்கேளே, பசிக்காதா, பாவம். பசிக்கத்தான் பசிக்கும். வாங்கோ!’ என்றாள் ராஜம்.
அதற்கு சிவராமன், ‘அந்த நாளிலே அடிமைகளைக் கூட அவர்களுடைய எசமானர்கள் இந்த மாதிரி விரட்டியிருப்பார்களா என்பது சந்தேகந்தான்’ என்றான்.
ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள். எதிர்பாராத தருணத்திலெல்லாம் சடார் சடார் என்று சாட்டையடி. ஒரே காரணம், மற்ற தொழில்களைப் போல் எழுத்துக்குப் பணம் வருவதில்லை. அதனால் வீட்டில் பட்டினி. அதனால் வீட்டில் அவமரியாதை. கடைசியில் சிவராமன் தன் அத்தங்காள் பவானியையும் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான் என்று முடிகிறது சரிமாவின் உயில் நாவல். முடிவில் எத்தனை சதவிகிதம் சுயசரிதை என்று தெரியவில்லை. ‘ஆனால் அப்போது இருதாரத் தடுப்புச் சட்டம் இல்லை’ என்று முன்னுரையில் எழுதுகிறார் க.நா.சு.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்தது; அது எத்தகைய சீரழிவைச் சந்தித்தது; அதன் வாழ்வும் தாழ்வும் எப்படி அமைந்தது என்பதுதான் க.நா.சு. நாவல்களின் மையப்புள்ளி. பொய்த் தேவு, அவதூதர் இரண்டையும் அதற்கான மகத்தான இலக்கிய சாட்சிகளாகக் கூறலாம்.
சில உதாரணங்களைப் பார்ப்போம். முதலில் சிறுவர்களின் கல்வி. இரண்டு மூன்று வருஷங்கள் பள்ளிக்கூடத்திலே படிப்பான் பையன். அதற்குள் பெற்றோரும் மற்றோரும் படிப்பால் என்ன பிரயோசனம் என்பார்கள். படிப்பு நின்று விடும். விடாமல் படித்துப் புரட்டியவர்களின் பிற்கால வாழ்க்கையைக் கவனிக்கும்போது அப்படி விட்டது சரியான காரியமே என்றுதான் அவர்களுக்குப் படும். இதற்கு விலக்காக உள்ளவர்கள் சில ஐயர் வீட்டுப் பிள்ளைகள். சாத்தனூர் பள்ளிக்கூடத்தை முடித்து விட்டு, கும்பகோணத்துக்குக் கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு போய் பெரிய பள்ளியிலே படித்து, பிறகு பட்டணம் (சென்னை), கோயம்புத்தூர் என்று எங்கெங்கோ வேலைக்குப் போய் விடுவார்கள்.
பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு முதல் நாள் போகும் வைபவம் ஒரு திருமணச் சடங்கைப் போல் நடக்குமாம். அப்படி ஒரு வைபவத்தை வர்ணிக்கிறார் க.நா.சு. ‘அதிகாலையிலிருந்து நண்பகல் வரையில் மேளக்கார ராமசாமி ஊதித் தள்ளி விட்டான். தவுல்காரன் தவுலைக் கையாளும் கோலாலும் மொத்தித் தள்ளி விட்டான். பொரியும் கடலையும் – இது ஒரு பதக்கு, அது ஒரு பதக்கு – கலந்து, போன இடம் தெரியாமல் போய் விட்டன. இருநூறு பேருக்கு மேல் வந்து விருந்து சாப்பிடக் காத்திருந்தார்கள்.
விருந்து முடிந்ததும் மீண்டும் மேளம் கொட்டத் தொடங்கி விட்டது. பையனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். முதலில் மேளக்காரர்கள் வாசித்துக் கொண்டே தெருவில் வந்து நின்றார்கள். பையனும் வந்து நின்றான். மாங்காய் மாங்காயாகச் சரிகை வேலை செய்த சிவப்புப் பட்டு உடுத்தியிருந்தான். மேலே ஒரு சீட்டித் துணிச் சொக்காய் – அந்தச் சீட்டியிலே பெரிய பெரிய பூக்கள் போட்டிருந்தன. தலையைப் படிய வாரிச் சீவிப் பின்னி விட்டிருந்தார்கள். எலிவால் போன்ற சடையின் நுனியைச் சிவப்புப் பூநூல் அலங்கரித்தது. பையனின் கறுத்த நெற்றியிலே கறுப்புச் சாந்துப் பொட்டு ஒன்று ஒளியிழந்து தெரிந்தது. பெண்களின் கூந்தலிலே வைப்பது போல் ஒரு மல்லிகைச் சரத்தை அவன் தலையிலே வைத்திருந்தார்கள். வால்பெண் ஒன்று – அது அவன் அக்காளாக இருக்கும் – பையன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த போது அவனுடைய எலிவால் சடையை வெடுக்கென்று இழுத்து விட்டு ஓடிப் போய் விட்டாள். பையன் மிரள மிரள நாலா பக்கமும் பார்த்துக் கொண்டே நின்றான்.’ (பொய்த் தேவு)
இப்படியே சுமார் 3000 பக்கங்கள் நாவலாக எழுதித் தள்ளியிருக்கும் ஒரு மகத்தான எழுத்தாளனை இங்கே விமரிசகர் என்று பட்டம் கொடுத்து வைத்திருப்பது எப்பேர்ப்பட்ட கொடுமை என்று யோசித்துப் பாருங்கள்.
சாத்தனூரில் இருபதுகளின் (1920) மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது பஞ்சாமியின் ஹோட்டல். அதன் மூலம் சர்வமானிய அக்ரஹாரத்தில் ஒரு வீட்டையும் வாங்கினார். மூத்த மனைவி. அதோடு, ஆண்டுக்கு ஆண்டு மாறும் இளைய மனைவி. சில ஆண்டுகளில் பஞ்சாமி ஊரிலேயே பெரிய பணக்காரராகி விட்டார். எப்படியென்றால், பம்பாயில் சிவப்பு விளக்குப் பகுதிகளுக்குப் பெண் விற்பனை செய்தார் பஞ்சாமி. இளைய மனைவி என்று அவர் அழைத்து வரும் பெண்கள் ஒரே வருடத்தில் காணாமல் போவதற்குக் காரணம் அதுதான் என்பதை ஊர்க்காரர்கள் யூகித்துக் கொண்டார்கள். இது தவிர, பாண்டிச்சேரியிலிருந்து கள்ளக் கடத்தலும் செய்தார். இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட அக்ரஹாரம், அலமுவின் பேத்தி (அலமு யார் என்று பின்னால் வரும்) கீழ்ச் சாதி இளைஞன் ஒருவனைக் காதலித்தபோது அவனை அடித்துக் கொல்லவும் தயாராகிறது.
ஆட்கொல்லி நாவலில் க.நா.சு. ஒரு மாமா, மாமியைப் பற்றி எழுதுகிறார். மாமாவை இயக்குபவள் மாமி. தாளிப்பதற்குக் கடுகையே எண்ணிப் போடும் ரகம். அப்படி இருந்தால் கூடப் பரவாயில்லை. அடுத்தவன் காசை அடித்துப் பிடுங்கி பணக்காரர்கள் ஆனவர்கள் அவர்கள். லேவாதேவி. ஒரே பத்தியில் அந்த நாவல் முழுவதையும் நாம் புரிந்து கொண்டு விடலாம்.
மேலத்தெரு சதாசிவன் பெண்டாட்டி செத்துக் கிடக்கும்போது காரியம் செய்வதற்கென்று ஒன்றரை வட்டியில் வேங்கடாசலத்திடம் (கதைசொல்லியின் மாமா) ஐநூறு ரூபாய் கடன் வாங்கினான். ஆறு வருஷத்தில் வட்டியோ முதலோ திருப்பித் தரப்படாமல் ஆயிரத்துக்கு இரண்டு வட்டிக்குச் சீட்டு எழுதித் தரப்படவே இன்னொரு நாலு வருஷத்தில் சதாசிவத்தின் நார்த்தங்கால் செக்குமேடு நிலம் பூராவும் மாமாவுடையதாகி விட்டது. சாதாரணமாக மூவாயிரத்துக்குக் குறைவில்லாமல் விலை போகும். மாமா தந்த ஐநூறுக்கு ஈடாகி விட்டது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

