இப்போதுதான் முதல்முறையாக கிருஷ்ணன் நம்பியைப் படிக்கிறேன். குமரி மாவட்டம் என்றாலே எனக்குக் கொஞ்சம் தயக்கம் உண்டு. அந்தத் தயக்குத்துடனேதான் அவரை அணுகினேன். ‘மருமகள் வாக்கு’ என்ற ஒரே கதையில் தெரிந்து விட்டது கிருஷ்ணன் நம்பி உலகின் மகத்தான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் என்று.

ஒரு ஊரில் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளை. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனார். இருவரும் உயிரைக் கொடுத்து வேலை செய்ய ஊர் இரண்டு பட்டு நிற்கிறது.
அந்த ஊரில் மீனாட்சி அம்மாள் என்று ஒரு பெண்மணி. அவள் கணவன் தாலுகா ஆஃபீஸ் பியூனாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டான். இறப்பதற்கு முன் அறுபத்தாறு செண்ட் நஞ்சையை அவள் பெயருக்குக் கிரயம் செய்து வைத்திருக்கிறான். மீனாட்சிக்கு ஒரு மகன். ராமலிங்கம். அவனுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வைத்தாள் மீனாட்சி. மருமகள் ருக்மிணி மெலிந்து காணப்பட்டாலும் வேலைக்குச் சளைக்காதவள். அதிகாலையில் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து படுக்கப் போகும் முன் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி வைப்பது வரை ஓயாமல் இருந்து கொண்டிருக்கும் வேலை. மார்வலியும் இரைப்பும் கொண்டவள். ஆனால் மீனாட்சி அம்மாள் அவளை மருத்துவரிடம் அனுப்பச் சம்மதிக்கவில்லை. வைத்தியர்களுக்குக் காசு ஒன்றே குறி. மீனாட்சி அம்மாளுக்குத் தெரியாதா? எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்று சொல்லி விட்டாள். மேலும், டாக்டரிடம் போவதற்கு யாரும் இங்கே சாகக் கிடக்கவில்லையே?
மருமகள் ருக்மிணி அந்த வீட்டில் ஒரு கொத்தடிமை. வெளியில் இருந்து வருபவர்களிடம் வாய் திறந்து ஒரு சொல் போய் விடக் கூடாது என்பது மீனாட்சியின் உத்தரவு. வீட்டில் மீனாட்சி அம்மாள் செய்யும் வேலை, பணப் பட்டுவாடா செய்வது, மற்றும் ஒரு நோட்டுப் புத்தககத்தில் ஸ்ரீராமஜயம் எழுதுவது. சாவதற்குள் பத்து லட்சத்து ஒன்று எழுதி முடித்து விடவேண்டும் என்பது அவள் திட்டம். ஏற்கனவே லட்சத்துச் சொச்சம் எழுதி அந்த அக்ரஹாரத்துப் பெண்களை அசத்தியிருக்கிறாள். மாமியாரும் மருமகளும் சேர்ந்துதான் சாப்பிடுவது. ஆனால் அங்கேயும் சர்வாதிகாரம். உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு! அதிகமாகச் சாப்பிட்டால் ஊளைச் சதை போட்டு விடும். ஆனால், இந்த விதி மீனாட்சிக்கு அல்ல. ரொம்பப் பொறுக்க முடியாமல் போய் இரண்டு மூன்று முறை ருக்மிணி மீனாட்சிக்குத் தெரியாமல் அள்ளிப் போட்டுக் கொண்டு தின்றிருக்கிறாள்.
இப்படிப்பட்ட ஒரு நரகத்திலும் ருக்மிணிக்கு ஒரே ஒரு சிறிய சந்தோஷம் உண்டு. மத்தியான உணவுக்குப் பிறகு மீனாட்சி அம்மாள் கொஞ்சம் படுத்துக் கிடப்பாள். அந்த வேளையில் ருக்மிணி தொழுவத்தில் மாட்டுக்குத் தவிடும் தண்ணீரும் காட்ட வேண்டும். அது குடிப்பதையும் கட்டுப்புல் தின்பதையும் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு மிகப் பெரிய சந்தோஷம். ‘சவமே, எம்பிட்டுத் தின்னாலும் ஒம் பசி அடங்காது’ என்று பொய்க் கோபத்துடன் அதன் நெற்றியைச் செல்லமாய் வருடுவாள். மாடு என்பது மகாலட்சுமி. அதன் வயிறு வாடக் கூடாது; வாடினால் கறவை வாடி விடும் என்பாள் மாமியார். ‘பசுவே, நீ மட்டும் பெண் இல்லையா? உண்டி சுருக்கற நியாயம் ஒனக்கும் எங்க மாமியாருக்கும் மாத்ரம் கெடையாதா சொல்லு?’ என்று அதன் முதுகில் தட்டுவாள் ருக்மிணி. பசுவின் கழுத்துத் தொங்கு சதையைத் தடவிக் கொடுப்பதில் அவளுக்குத் தனியான ஆனந்தம். அதற்கும் இது பிடிக்கும். முகத்தை இவள் பக்கமாகத் திருப்பி இவள் மேல் ஒட்டிக் கொள்ளப் பார்க்கும்.
அன்றைய தினம் ருக்மிணி ஓட்டுப் போடப் போக வேண்டும். கிளிக்குத்தான் போட வேண்டும் என்பது அவள் விருப்பம். கிளி எவ்வளவு அழகு! அவளுக்குக் கிளியைப் போல் பறக்க வேண்டும் என்று ஆசை.
பசு அழியிலிருந்து ஒரு வாய் வைக்கோலைக் கடித்துக் கொண்டே தண்ணீரையும் உறிஞ்சத் தொடங்க, ‘சவமே, எதுக்கு இப்படிச் சிந்திச் செதறறாய்? தேவாளுக்காச்சா? அசுராளுக்காச்சா? ஒழுங்கா வழியாக் குடியேன்’ என்று அதன் தாடையில் ஒரு தட்டு.
அதற்கடுத்து ருக்மிணி பசுவிடம் தன் வாழ்க்கையைப் பற்றி வெகு சகஜமாகப் பேசுகிறாள். அதுவும் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறது. மேஜிகல் ரியலிசம் அல்ல. இங்கே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எதார்த்த வாழ்க்கையே அப்படித்தான் இருந்தது. இவள் பேசி முடிக்கவும் பசு பொத் பொத்தென்று சாணி போட்டு ஒரு குடம் மூத்திரத்தையும் பெய்கிறது. உடனே ருக்மிணி அவசரத்துடன் சாணியை இரு கைகளாலும் லாகவமாக அள்ளிக் கொண்டு போய்ச் சாணிக் குண்டில் போடுகிறாள். புல் தரையில் கையைத் துடைத்து விட்டு அங்கிருந்து நகர, பசு அவளை நிமிர்ந்து பார்த்து ‘ம்மா’ என்று கத்திற்று. இதோ ஓட்டுப் போட்டு விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டுப் போகிறாள் ருக்மிணி.
இதுதான் இந்திய வாழ்க்கை. குறைந்த பட்சம் பெண்கள் வரையிலாவது இப்படித்தான் இருந்தது. இன்றைய தினம் பிராமணர்களே மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளை வைத்திருக்கும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் அன்னையின் மேற்கண்ட வாழ்க்கை ஞாபகம் வருகிறது. ருக்மிணி என்னுடைய அம்மாவும்தான். அந்த வாழ்க்கையை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
ஓட்டுச் சாவடிக்கு வருகிறாள் ருக்மிணி. அது ஒரு பள்ளிக் காம்பவுண்டு. அங்கே ஒரு அளிச மரம். அதைப் பார்த்ததும் அவளுக்குத் தன் சிறு பிராய ஞாபகங்கள் வருகின்றன. இந்த உலகத்திலேயே ஒரே ஒரு அளிச மரம்தான் உண்டு; அதுவும் வேம்பனூர் தேவசகாயம் ஆரம்பப் பாடசாலைக் காம்பவுண்டுக்குள்தான் உண்டு என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு இங்கேயும் ஒரு அளிச மரத்தைப் பார்த்ததும் பரவசம் ஏற்படுகிறது. அளிச மரத்தில் ஏறி பழம் பறித்துத் தின்ற பொழுதுகளையெல்லாம் நினைத்துப் பார்க்கிறாள்.
மாமியார் அவளைப் பூனைக்குப் போடச் சொல்லி அனுப்பியிருந்தாள். ஆனாலும் இன்று முதல்முதலாக ருக்மிணி மாமியாரின் பேச்சைக் கேட்கப் போவதில்லை என்று தீர்மானம் செய்கிறாள். அவள் கிளிக்குப் போட்டாளா, பூனைக்குப் போட்டாளா என்ற இடம் உலக இலக்கியத்தில் ஒரு சிகரம். நீங்களே படித்துப் பாருங்கள். ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள இந்தக் கதை கணையாழி அக்டோபர் 1974 இதழில் வெளி வந்தது.
நான் தொடர்ந்து பல காலமாகச் சொல்லி வரும் ஒரு விஷயம், ஜனரஞ்சிகைப் பத்திரிகைகளின் மூலம் இலக்கியம் வளராது. மலையாளம், வங்காளம் போன்ற சூழல்கள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் தமிழில் அது சாத்தியமில்லை. லா.ச.ரா. ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் மட்டுமே எழுதினார். அதை ஒரு அதிசயம் என்று மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பத்திரிகையாளர் சாவி எழுத்தாளர்களை வளர்த்து விடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர். சுஜாதா, ஜெயகாந்தன் ஆகியோர் பிரபலமானதில் சாவிக்குப் பெரும் பங்கு உண்டு. ஆனால் அப்பேர்ப்பட்ட சாவியே மேற்கண்ட கதையைப் பிரசுரிக்க முடியவில்லை என்று கிருஷ்ணன் நம்பிக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறார். பின்வருவது சாவியின் கடிதம்: ‘மருமகள் வாக்கு’ கதை மிகவும் பிரமாதமாக இருக்கிறது. ஆனால், சில காரணங்களினால் என்னால் வெளியிட இயலவில்லை. நீங்கள் விரும்பியபடி, கதையை இத்துடன் திருப்பி அனுப்பியிருக்கிறேன்.’
***
‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ என்ற தலைப்பில் கிருஷ்ணன் நம்பியின் எழுத்துக்கள் யாவும் காலச்சுவடு பதிப்பகத்தால் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் சுந்தர ராமசாமி தன் நெருங்கிய நண்பரான கிருஷ்ணன் நம்பி பற்றி எழுதிய ஒரு பிரமாதமான கட்டுரை பின்னுரையாக சேர்க்கப்பட்டுள்ளது. நம்பியின் இயற்பெயர் அழகிய நம்பியாக இருந்திருக்கிறது. ஆனால் அக்காலத்தில் எழுத்தாளர்களுக்குத் தங்கள் பெயர் பிடித்திருக்கவில்லை. அந்த வழக்கப்படியே அவரும் தன் பெயரை கிருஷ்ணன் நம்பி என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். கிருஷ்ணன் நம்பியின் மற்றொரு விசேஷமான அம்சம், அவர் குழந்தைகளைப் பற்றி அதிகம் யோசித்திருக்கிறார். குழந்தைகளுக்கான கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் மற்ற குழந்தைக் கவிஞர்களைப் போல் அவர் குழந்தைகளை உய்விப்பதற்கான போதனைகள் சொல்லவில்லை. அவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தன்னிடம் உள்ள விஷயங்களை எழுதினார். இது நம்பி பற்றி சு.ரா.வின் கருத்து. அது உண்மையும் கூட. மேலும் சு.ரா. சொல்கிறார்:
நம்பியின் குழந்தைக் கவிதைகளையும் அவர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விடவும் பல மடங்கு புகழ் பெற்றிருந்த வேறு பல குழந்தைக் கவிஞர்களுடைய கவிதைகளையும் அன்று படித்துப் பார்த்தபோது தமிழிலேயே சிறப்பான குழந்தைக் கவிதைகள் எழுதியிருப்பவர் நம்பிதான் என்று எனக்குப் பட்டது…
எவ்விதத் தூண்டுதலுமின்றி நம்பியின் கவிதைகளைக் குழந்தைகள் பாடி மகிழ்ந்துள்ளதை நானே நன்கு அறிவேன். என் குழந்தைகள் அவருடைய கவிதைகளை மிகவும் விரும்பிப் பாடியது என் பழைய நினைவின் சந்தோஷமான பகுதியாகும். எவ்வளவோ வருடங்கள் ஓடி மறைந்த பின்பும் பணியும் படிப்பும் என் குழந்தைகளை அன்னியச் சூழலுக்கும் நெடுந்தொலைவுக்கும் இட்டுச் சென்ற பின்பும், ‘நம்பி மாமா’வின் பாடல்களை அவர்கள் இன்றும் நினைவுகூர்ந்து வரிகளை ஒப்பிப்பது அவருடைய திறனுக்குக் காலம் தந்த ஆமோதிப்பு என்றே நம்புகிறேன்.’
காலச்சுவடு தொகுப்பில் கிருஷ்ணன் நம்பி எழுதிய குழந்தைக் கவிதைகள் மொத்தம் 39 இருக்கின்றன. ஆங்கில மோகம் கொண்டு அலையும் தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டிய அற்புதமான பாடல்கள் அவை.
அதில் ஒரு பாடல் இது:
விளக்கின் வேண்டுகோள்
காற்று மாமா, காற்று மாமா கருணை செய்குவீர்!
ஏற்றி வைத்த ஜோதி என்னை ஏன் அணைக்கிறீர்?
சின்னஞ் சிறு குடிசை இதைச் சிறிது நேரம் நான்
பொன்னிறத்துச் சுடரினாலே பொலியச் செய்குவேன்.
ஏழைச் சிறுவன் என்னை நம்பிப் பாடம் படிக்கிறான்;
ஏழும் மூணும் பத்து என்று எழுதிக் கூட்டுறான்.
அன்னை அதோ அடுப்பை மூட்டிக் கஞ்சி காச்சுறாள்;
என்ன ஆச்சு என்று பானைக் குள்ளே பார்க்கிறாள்.
படிக்கும் சிறுவன் வயிற்றுக்குள்ளே பசி துடிக்குது;
அடிக்கொரு தரம் அவனது முகம் அடுப்பைப் பார்க்குது.
காச்சும் கஞ்சி குடிக்க வெளிச்சம் காட்ட வேண்டாமோ?
ஆச்சு, இதோ ஆச்சு என்னை அணைத்து விடாதே!
***
தொகுப்பில் என்னைக் கவர்ந்த மற்றொரு விஷயம், கிருஷ்ணன் நம்பி தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள். முதல் கடிதம் கி. ராஜநாராயணனுக்கு எழுதியது. தேதி 24.5.1961. முகவரி: கோகுலம், கிருஷ்ணன் கோயில், நாகர்கோயில். கி.ரா. தன் குழந்தைக்காக நெல்லையிலிருந்து வாங்கிச் சென்ற பொம்மை அவர் குழந்தைக்குப் பிடித்திருந்ததா என்று கேட்டு எழுதியிருக்கிறார். அதில்தான் என்ன ஒரு நயம்!
தன் மகன் முரளிக்கு வாங்கிக் கொடுத்த ஸெல்லுலாய்டு பொம்மையை (விலை எட்டணாவோ பத்தணாவோ) அடுத்த நிமிஷமே தரையில் தட்டி உடைத்து விட்டானாம். அதில் இருந்த இரும்புக் கம்பியாவது பிழைத்ததே என்று பார்த்தால் அதையும் கிணற்றில் போட்டு விட்டான். நம் குழந்தைகள் தமிழனின் வீரப் பரம்பரையை நினைவூட்டுகிறார்கள். அதோடு, நிலையாமைத் தத்துவத்தையும் நினைவுக்கு வந்து விடுகிறது என்று கேலியும் கிண்டலுமாக எழுதுகிறார் கிருஷ்ணன் நம்பி.
இப்போதெல்லாம் இப்படிப்பட்ட குடும்ப உறவுகள் எழுத்தாளர்களுக்கு இடையே இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐந்து நிமிடம் முன்னால்தான் என்னை ஒரு போலி எழுத்தாளன் என்று வர்ணித்து எழுதிய ஒரு நிஜ எழுத்தாளரின் கட்டுரையைப் படித்து முடித்தேன். காலம் மாறிக் கொண்டிருக்கிறது.
பொம்மையை உடைத்த கிருஷ்ணன் நம்பியின் புதல்வர் முரளிக்கு இப்போது என் வயது இருக்கலாம். அவரைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

