நடக்குமா நதிகள் இணைப்பு?
இந்தியாவில் ஆண்டுதோறும் சில மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும், சில மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது.


இந்தியாவில் ஆண்டுதோறும் சில மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும், சில மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. தமிழகத்தில்கூட சில மாவட்டங்கள் எப்போதுமே கடும் வறட்சியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையை மாற்ற நாடு முழுவதுமுள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் கோரி வருகின்றன. சில நதிகளின் நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. குறிப்பாக, கோதாவரி ஆற்றின் நீர், பெரும்பாலும் கடலில்தான் கலக்கிறது. நதிகளின் நீரை திசை திருப்பி விட்டாலே பல மாநிலங்கள் பயன்பெறும்.
மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு நதிகள் இணைப்பில் எப்போதுமே ஆர்வம் காட்டியதில்லை. மத்தியில் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தபோதுதான் நதிகள் இணைப்புத் திட்டம் பற்றிய எண்ணமே உருவானது. இந்த விஷயத்தில் வாஜ்பாய் மிகவும்
ஆர்வம் காட்டினார். இதை அவரின் கனவு திட்டம் என்றுகூட சொல்லலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, நதிகளை இணைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்தப் பணிகள் தொடர்ந்திருந்தால் இந்த 12 ஆண்டுகளில் நாட்டில் பல மாநிலங்களில் வறட்சி ஏற்பட்டிருக்காது.
ஆனால், 2004-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. நதிகள் இணைப்பினால் ஏற்படும் பயன்கள் பற்றி சிந்திக்காததால் காங்கிரஸ்காரர்கள் அந்தத் திட்டத்தை வீண் என்று கூறிவிட்டார்கள். அதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நதிகள் இணைப்புத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. இதனால், நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்ற தமிழக மக்களின் கனவு கானல் நீரானது.
நதிகளை இணைப்பதன்மூலம் தண்ணீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுக்கலாம். இதனால், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் செழிப்பான வளர்ச்சியைப் பெறும். கங்கை-காவிரி இணைப்புத் திட்டம், நாடு சுதந்திரம் அடைந்தபோதே உருவான திட்டம். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்தத் திட்டம் ஒரு கனவாகவே உள்ளது. நதிகள் இணைக்கப்பட்டால் வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகளில் இருந்து மாநிலங்கள் மீளும்.
ஓர் ஆண்டு வெள்ளத்தால் சில மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டால், அடுத்த ஆண்டு வேறு சில மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. தென் மாநிலங்களில் உள்ள நதிகளில் வெள்ளப் பெருக்கு என்பது சற்றுக் குறைவுதான். மழைக்காலங்களில் மட்டுமே தென்னக நதிகளில் தண்ணீர் அதிகமாக ஓடும். மழை பொய்த்துவிட்டால், அதுவும் இல்லாமல் போய்விடும். தமிழகம் விவசாயத்துக்கு நதிகளை நம்பித்தான் உள்ளது. ஆனால், காவிரி நீர் பிரச்னை பற்றி சொல்லவே தேவை இல்லை.
வட மாநிலங்களில் நதிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கடலில் கலந்து வீணாகிறது. இதற்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பதுதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "கங்கை - காவிரி இணைப்பு திட்டம்' என்று ஒரு கோஷமே எழுந்தது. ஆனால், இதை செயல்படுத்த மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு சிறிதும் முயற்சி செய்யவில்லை.
இப்போது ஆட்சியமைத்திருக்கும் நரேந்திர மோடி அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றினால்தான், மாநிலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கும், வறட்சி பாதிப்புகளுக்கும் ஒரு நிதந்தரத் தீர்வு ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...