வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பகுதி 22 – கோயில் திருப்பதிகம் - 2

அன்பர்களுக்கெல்லாம் அரசனே, என்னுடைய அப்பனே, உயிரிலும் உடலிலும் கலந்து அவற்றைக் கனியச் செய்தவனே,

News image
Updated On :23 நவம்பர் 2015, 10:13 am

என். சொக்கன்

பதிகம் என்பது பத்து பாடல்களின் தொகுப்பு. இந்தப் பத்து பாடல்களின் திருப்பெருந்துறை சிவனின் பெருமை குறிப்பிடப்படுவதால், இங்கே  ‘கோயில்’ என்பது திருப்பெருந்துறை என்று கொள்ள வேண்டும்.

இவை அந்தாதி வகையில் அமைந்த பாடல்கள், அதாவது, முதல் பாடலின் நிறைவுச் சொல், அடுத்த பாடலின் முதல் சொல்லாக அமையும்.

140

பாடலின்பம்

அரைசனே அன்பர்க்கு, அடையனேனுடைய

அப்பனே, ஆவியோடுஆக்கை

புரைபுரை கனியப் புகுந்துநின்றுஉருக்கிப்

பொய்இருள் கடிந்த மெய்ச்சுடரே,

திரைபொராமன்னும் அமுதத் தெண்கடலே

திருப்பெருந்துறைஉறை சிவனே,

உரை,உணர்வு இறந்துநின்று உணர்வதுஓர் உணர்வே,

யான்உன்னை உரைக்கும்ஆறுஉணர்த்தே.

*

உணர்ந்த மாமுனிவர், உம்பரோடு ஒழிந்தார்

உணர்வுக்கும் தெரிவுஅரும் பொருளே,

இணங்குஇலி, எல்லா உயிர்கட்கும் உயிரே,

எனைப் பிறப்புஅறுக்கும் எம் மருந்தே,

திணிந்ததோர் இருளில் தெளிந்த தூவெளியே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

குணங்கள்தாம் இல்லா இன்பமே, உன்னைக்

குறுகினேற்கு இனிஎன்ன குறையே.

பொருளின்பம்

அன்பர்களுக்கெல்லாம் அரசனே, என்னுடைய அப்பனே, உயிரிலும் உடலிலும் கலந்து அவற்றைக் கனியச் செய்தவனே, உருகச் செய்தவனே, பொய்யான இருளை விரட்டிய மெய்யான சுடரே, அலை வீசுகின்ற தெளிவான அமுதக் கடலே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, பேச்சு, உணர்வு என்பவற்றைக் கடந்து நிற்கும் உணர்வே, சிவபெருமானே, நான் உன்னை எப்படிப் புகழுவேன்? நீயே சொல்.

*

அனைத்தையும் உணர்ந்த பெருமுனிவர்கள், தேவர்கள், மற்ற யாருடைய உணர்வுக்கும் எட்டாதவனே, ஒப்பில்லாதவனே, எல்லா உயிர்களுக்கும் உயிராகத் திகழ்கிறவனே, என்னுடைய பிறவிப்பிணியை அறுக்கும் மருந்தே, அடர்த்தியான இருளில் தெளிவாகத் தெரியும் தூய வானமே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, தனக்கெனத் தனியே குணங்கள் ஏதும் இல்லாத இன்பமே, சிவபெருமானே, நான் உன்னை வந்தடைந்தேன், இனி எனக்கு ஏதும் குறையில்லை.

சொல்லின்பம்

அரைசனே: அரசனே

ஆக்கை: உடல்

புரைபுரை: துளைகளினுள்ளே

கடிந்த: விரட்டிய

திரை: அலை

தெள்: தெளிவான

உம்பர்: தேவர்

இணங்குஇலி: ஒப்பற்றவன்

தூ: தூய்மையான

குறுகினேன்: வந்தடைந்தேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.