ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 349

நித்தியமானவனே!  விசித்திரமான அழகுடைய தோகை மயில் வாகனனே! 

Updated On :30 ஆகஸ்ட் 2016, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

கொத்து ஆர் பல் கால் அற்று ஏக பாழ் குப்பாயத்தில் செயல் மாறி

 

கொத்து ஆர் பல்: வரிசையாக அமைந்திருக்கும் பற்கள்; காலற்று ஏக: வேர் அற்றுப்போய் விழ; குப்பாயம்: சட்டை (சட்டையாகிய உடல்);

கொக்காகி கூனி கோல் தொட்டே கொட்டாவி குப்புற வாசி

 

கொக்கு ஆகி: தலைமயிர் கொக்கைப்போல வெள்ளையார் நரைத்து; கூனி: கூன் விழுந்து; கோல் தொட்டே: குச்சி ஊன்றியபடி; வாசி: மாறுபடும் நிலைகளை;

தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன் அஆ உஉ எனவே கேள்

 

தித்தா: அனுபவித்து; நிற்றார்: நின்றார் (வலித்தல் விகாரம்); அஆ உஉ: ஹாஹா ஹூஹூ; கேள்: உறவினர்;

செற்றே சுட்டே விட்டு ஏறி போம் அ பேது துக்கம் அறாதோ

 

செற்றே: சென்றே (வலித்தல் விகாரம்); பேது: பேதைமையுள்ள;

நித்தா வித்தார தோகைக்கே நிற்பாய் கச்சி குமரேசா

 

வித்தாரத் தோகை: விசித்திர அழகுள்ள தோகையையுடைய மயில் (அல்லது) மயில்போன்ற வள்ளி; கச்சி: காஞ்சி;

நிட்டூர சூர் கெட்டு ஓட போர் நெட்டு ஓதத்தில் பொருதோனே

 

நிட்டூர: நிஷ்டூர, கொடிய; நெட்டு: நெடிய; ஓதத்தில்: கடலில் (ஓதம்: கடல்);

முத்து ஆர தோளில் கோடற் பூ முட்டாது இட்டத்து அணிவோனே

 

கோடற்பூ: வெண்காந்தள் பூ; முட்டாது: தவறாது; இட்டத்து: இஷ்டத்துடன்;

முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே.

 

முற்றா: முற்றாத, முதுமையடையாத; நித்தா: நித்தியமானவனே; அத்தா: தந்தையே;

கொத்தார் பற் கால் அற்று ஏகப் பாழ் குப்பாயத்திற் செயல்மாறி ... வரிசையாக நின்றிருக்கும் பற்கள் வேரற்றுப்போய் விழுந்துபட; பாழ்பட்ட சட்டையைப் போன்ற இந்த உடலுடைய செயல்கள் தடுமாறி,

கொக்காகிக் கூனிக் கோல் தொட்டே கொட்டாவிக் குப்புற... கொக்கின் நிறத்தைப் போல தலைமயிர் வெளுத்துப்போய்; கூனல் விழுந்து; கோலை ஊன்றிக்கொண்டு; கொட்டாவி விட்டுக்கொண்டு; தலை தொங்கிப் போய்;

வாசித் தித்தா நிற்றார் செத்தார்... (இப்படியெல்லாம்) மாறுகின்ற நிலைகளை அனுபவித்தபடி நிற்பவர்கள் இறந்ததும்,

கெட்டேன் அஆ உஉ எனவேகேள் செற்றே சுட்டே விட்டு ஏறிப்போம் ... ‘அந்தோ கெட்டோம்!  ஹாஹா ஹூஹூ’ என்றெல்லாம் (கதறும்) உறவினர்கள், (சுடுகாட்டுக்கு எடுத்துச்) சென்று, அங்கே உடலை எரித்து (அதன் பிறகு நீரில் மூழ்கிக் கரை) ஏறி (உறவு) விட்டுப் போனது என்று செல்கின்ற,

அப்பேதுத் துக்கம் அறாதோ ... பேதைமை நிறைந்ததான அந்த துக்கம் தீராதோ?

நித்தா வித்தாரத் தோகைக்கே நிற்பாய் கச்சிக் குமரேசா ... நித்தியமானவனே!  விசித்திரமான அழகுள்ள தோகைமயில் மீது விளங்குபவனே! (அல்லது விசித்திரமான அழகுள்ள தோகை மயில்போன்ற வள்ளிக்காகப் புனத்தில் வந்து நின்றவனே!) காஞ்சிக் குமரேசனே!

நிட்டூரச் சூர் கெட்டோடப் போர் நெட்டு ஓதத்திற் பொருதோனே ... நிஷ்டூரனான சூரன் கேடடைந்து (கடலுக்குள்ளே) ஓட, அந்த நெடிய கடலில் போர்புரிந்தவனே!

முத்தாரத் தோளிற் கோடற்பூ முட்டாது இட்டத்து அணிவோனே ... முத்து ஹாரம் (முத்துமாலை) அணிந்த தோளில் வெண்காந்தள் மலரை எப்போதும் விருப்பத்துடன் சூடிக்கொள்பவனே!

முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ... முதிராதவனே (முதுமையடையாதவனே)! நித்தியனே! பரிசுத்தனே! அப்பனே! முக்தியை அளிக்கவல்ல பெருமாளே!

சுருக்க உரை

நித்தியமானவனே!  விசித்திரமான அழகுடைய தோகை மயில் வாகனனே!  கொடிய சூரன் தோற்றோடிக் கடலுக்குள் புக, அந்தப் பெரிய கடலுக்கும் பெரும்போர் புரிந்தவனே!  முத்துமாலைகளை அணிகின்ற தோளிலே வெண்காந்தள் மலரைத் தவறாமல் விரும்பி அணிபவனே!  முதுமை அடையாதவனே!  நித்தியமானவனே! பரிசுத்தனே!  முக்தியை அளிக்க வல்ல பெருமாளே!

வரிசையான பற்களின் வேர்கள் தளர்ந்து விழ; பாழான சட்டையைப் போன்ற இந்த உடலின் செயல்கள் தடுமாற; தலைமயிரெல்லாம் கொக்கின் நிறம்போல வெளுக்க; கூன்விழ; கைத்தடியை ஊன்றிக்கொண்டு நடக்க—என்று இத்தனை மாற்றங்களையும் அனுபவித்த மனிதர்கள் இறந்ததும் துக்கப்பட்டு கதறும் உறவினர்கள் நீரில் மூழ்கி அதன்பின் மறந்துபோகும் பேதைமை நிறைந்த இந்த துக்கமானது நீங்க அருள்செய்ய வேண்டும்.  (பிறவித்துன்பம் அறவேண்டும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.