யார் இட்ட சாபமோ யாருக்கு
யார் மீது கோபமோ இல்லை
முன்னோர் செய்த பாவமோ
மனதறிந்து எந்த ஒரு பாவமும்
செய்ததாய் நினைவில்லை
எனக்கு மட்டுமேன் தீராதத் தொல்லை
வீண்பழி யென்மீது சுமத்தியதால்
நான் வணங்கும் தெய்வத்தின் முன்
மண்ணை வாரி வைத்து விட்டு
தவறு என்மீது எனில் என் தாலி
அறுபட்டு போகட்டும் இல்லையேல்
என்மீது பழி போட்டவர் தாலியை
எண்ணி எட்டோடு எட்டு நாளுக்குள்
அறுபட வதைக் கண்ணால் காணும் வரை
எந்தன் மனம் ஆறவேயாறாது
கங்கணம் கட்டிக்கொண்டு நின்றேன்
எட்டாம் நாள் என் தாலியே அறுபட்டு
சீமாட்டி யென்றெனை பாராட்டிய நா
கம்மனாட்டி யெனவழைக்க ஆளாகி
விட்ட பொம்மனாட்டியாய் நின்றேன்
சொல்புத்தி சுயபுத்தியை கொன்றிட
வருந்தி பின் உணரலானேன் என்
கண்கள் கெட்டப்பின் சூரியனை
நமஸ்கரிக்க யாருக் கென்ன லாபம்
யார் இட்ட சாபம் வேறு யாருமில்லை
எனக்கு நானே இட்டுக் கொண்டு விட்ட
சாபமே யன்றி வேறு யாராலும் இல்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.