ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

43. கொடுங்கண் வெண்தலை - பாடல் 1

நின்றியூர் சென்றபோது அருளிய பதிகம் இது

Updated On :11 நவம்பர் 2016, 11:52 am

(நின்றியூர் – குறுந்தொகை)

முன்னுரை

சீர்காழியிலிருந்து கோலக்கா சென்ற அப்பர் பிரான், அங்கிருந்து புறப்பட்டு, நீடூர், புன்கூர், கருப்பறியலூர், நின்றியூர் மற்றும் நனிப்பள்ளி சென்றதாக பெரியபுராண குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. அவ்வாறு நின்றியூர் சென்றபோது அருளிய பதிகம் இது. இந்த தலத்தின் மீது, ஞானசம்பந்தர், அப்பர் பிரான் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. அப்பர் பிரான் திருநின்றியூர் தலம் சென்ற செய்தியை குறிப்பிடும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட அரசு எழுந்தருளக் கோலக்காவை அவரோடும் சென்று                           
                                                             இறைஞ்சி அன்பு கொண்டு
மீண்டு அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால்                               
                                                  வேதநாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடூர் நீடு திருக்குறுக்கை                               
                                                                திருநின்றியூரும்
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல்                           
                                                        தொழுது வணங்கிச் செல்வார்

பாடல் 1

கொடுங்கண் வெண்தலை கொண்டு குறைவிலைப்
படும் கண் ஒன்று இலராய்ப் பலி தேர்ந்து உண்பர்
நெடுங்கண் மங்கையர் ஆட்டயர் நின்றியூர்க்
கடுங்கை கூற்று உதைத்திட்ட கருத்தரே

விளக்கம்

கொடுங்கண் = தோண்டப்பட்ட கண்கள்; படும் கண் = படும் இடுக்கண்; ஆட்டயர் = நடனம் ஆடும்.

கடுங்கை = வலிமை உடைய கை; உடலிலிருந்து உயிர்களைப் பிரிக்கும் வல்லமை கொண்ட இயமனின் கை.

குறை விலை படும் கண் ஒன்று = குறைந்த விலைக்கு விற்கக்கூடிய பொருட்கள் ஏதும் தன்னிடம் இல்லாதவராக.

பிச்சைப் பெருமானாக வேடம் ஏற்ற பெருமான், அந்த வேடத்திற்கு உரியவராக இருந்த நிலை இந்த தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. இந்த தொடர் நமக்கு காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.4.1) பாடலை நினைவூட்டுகின்றது.

உண்ணும் உணவிற்கு மாற்றாக கொடுக்கக்கூடிய பொருள் ஏதும் இல்லாத வறியவனாக, பிச்சைப் பெருமான் வேடம் ஏற்ற பெருமான் இருந்ததாக இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். நல்குரவு = வறுமை; நல்கூர்ந்தான் = வறியவன்; பிச்சை எடுத்து உண்பதைத் தவிர வேறு வழியில்லாத பெருமானை, ஏளனக் குறிப்பு தோன்ற மாச்சதுரன் (மிகுந்த சாமர்த்தியம் உள்ளவன்) என்று அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார். அனைத்து உலகங்களும், அந்த உலகங்களில் உள்ள பொருட்களும் படைத்த பெருமான், தான் ஒன்றும் இல்லாத வறியவனாக காட்சி அளிப்பதற்கும், தனியான திறமை வேண்டும் அல்லவா. அந்த திறமை உடைத்த பெருமானை மாச்சதுரன் என்று அப்பர் பிரான் அழைத்ததாக கொள்வது மிகவும் பொருத்தமாகும். பொழில் = உலகங்கள்; ஏழ் உலகங்களையும் தாங்கி நின்ற வல்லமை பொருந்தியவனாக விளங்கிய பெருமானை கற்றூண் என்று குறிப்பிடுவது நயமாக உள்ளது. பொய்யாது = தவறாது; கணநாதன் = சிவா கணங்களுக்குத் தலைவன்; வியன் கச்சி = அகன்ற வீதிகளைக் கொண்ட காஞ்சி மாநகரம்;

விற்று ஊண் ஒன்றில்லாத நல்கூர்ந்தான் காண் வியன்
                           கச்சிக் கம்பன் காண் பிச்சை அல்லால்
மற்று ஊண் ஒன்றில்லாத மாச்சதுரன் காண் மயானத்து
                            மைந்தன் காண் மாசு ஒன்றில்லா
பொற்றூண் காண் மாமணி குன்று ஒப்பான் காண் பொய்யாது
                            பொழில் ஏழும் தாங்கி நின்ற
கற்றூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண்
                            அவன் என் கண்ணுளானே

பொழிப்புரை

தோண்டப்பட்ட கண்களை உடைய கபாலத்தினை உண்கலனாக ஏற்று, தனக்கு வேண்டிய உணவுக்கு மாற்றாக கொடுப்பதற்கு, விலை குறைந்த பொருள்கூட தன்னிடம் இல்லாதவர் போன்று பிச்சைப் பெருமான் வேடம் தரித்து, பலி ஏற்றவர் சிவபெருமான். உடல்களிலிருந்து உயிரினைப் பிரிக்கும் வல்லமை கொண்ட கைகளை உடைய இயமனை, தனது அடியான் மார்க்கண்டேயனின் உயிரைக் காப்பதற்காக, உதைத்தவர் சிவபெருமான். அவ்வாறு இயமனை உதைத்துத் தனது அடியானை காத்ததால், அடியார்களின் கருத்தினில் நிலைபெற்று உறையும் பெருமான், நீண்ட கண்களை உடையவர்களாய் நடனம் ஆடும் மங்கையர்கள் நிறைந்த நின்றியூரில் எழுந்தருளி உள்ளார். அவரைப் போற்றி புகழ்ந்து பாடுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.