வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயகனுக்கு அருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே
விளக்கம்
விண்ட = மாறுபட்ட, சிவபூஜை செய்யும் தனது கொள்கையிலிருந்து மாறுபட்ட தந்தை. தனது தந்தை பால் குடத்தை இடறும் நோக்கத்துடன் வருவதை உணர்ந்த சிறுவன் சண்டீசன், தனது அருகில் இருந்த ஒரு கொம்பினை வீசி தந்தையின் செயலைத் தடுக்க நினைத்தான். ஆனால் அந்த கொம்பு, சிவபூஜைக்கு இடையூறு செய்வோரை தண்டிக்கும் மழுப் படையாக மாறி, சண்டீசரின் தந்தையின் கால்களை வெட்டியது. இந்த செய்தியை உணர்த்தும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. செயற்கரிய செயலைச் செய்த சிறுவன் ஆர் விகுதி கொடுக்கப்பட்டு மதிப்புடன் அழைக்கப்படுவதையும், அவனது தந்தை ஒருமையில் குறிப்பிடப்படும் நயத்தையும் நாம் இந்த பாடலில் ரசிக்கலாம்.
சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறையில்
தீயோனைத்
தந்தை எனவே அறிந்து அவன் தன் தாள்கள் சிந்தும்
தகுதியினால்
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே
முறைமையினால்
வந்து மழுவாயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான்
மறையோனும்
பெரிய புராணம் அளிக்கும் தகவல்களின்படி, சண்டீசரின் தந்தை முதலில், பாற்குடத்தை இடறித் தள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. தனது மகன், அடுத்தவர்களுக்கு உரிமையுள்ள பாலினை பயன்படுத்துகின்றானே என்று வருந்தி, தனது கையில் இருந்த தண்டினால் அவனது முதுகில் அடித்து, அவனது செயலை தடுக்கும் நோக்கத்துடன், பல கடிய சொற்களை பேசுகின்றார். ஆனால் இறைவனை வழிபடுவதில், மனம் மொழி மெய் அனைத்தும் ஒன்றி இருந்து ஈடுபட்டிருந்த சிறுவன், தனது தந்தை அடித்ததையோ, கடுஞ்சொற்கள் பேசி திட்டியதையோ உணரவில்லை. மகன் எதையும் உணராமல் இருந்ததால், மிகுந்த கோபம் கொண்ட தந்தை எச்சதத்தன், பாற்குடத்தை இடறி மகனது கவனத்தை ஈர்க்க நினைத்து, பாற்குடத்தை தனது கால்களால் உதைக்க முயன்றான் வழிபாட்டுக்கு உரிய பால் கீழே சிதறியதைக் கண்ட சிறுவன், மாடு மேய்ப்பதற்காக தான் வைத்திருந்த கோலினை எடுத்து தனது தந்தை மீது எறிந்தான். இறையில் = குறைந்த நேரத்தில், தந்தையாக இருந்தாலும், பாலினை இடறிய காரணத்தால், அவனை முதலில் தீயோனாக சண்டீசர் கருதி நோக்கியதை உணர்த்தும் பொருட்டு, சேக்கிழார் இங்கே தீயோன் தந்தை என்று கூறுகின்றார்.
பொழிப்புரை
தேனை சேகரிக்கும் எண்ணத்துடன் உள்ள வண்டுகளைக் கவரும் சோலைகள் நிறைந்த மங்கலக்குடி தலத்தில், வீற்றிருக்கும் இறைவன், சிவபூஜைக்கு இடையூறு செய்ய முற்பட்டவனை தந்தை என்றும் பாராமல் மழுவினை வீசி கால்களைத் துண்டித்த சண்டீசனுக்கு, சிவகணங்களுக்கு நாயகன் என்ற பதவியை அளித்து, அருள் செய்தவன் ஆவான். அவன் தனது சடையில் பிறைச் சந்திரனை சூடியுள்ள சோதியாவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

